கரகாஸ்: புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்துவது திட்டமிட்டபடி நடக்காமல் போக வெனிசுவேலாவில் பொதுமக்கள் ரொக்கம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலிசாருடன் நேற்று முன்தினம் கைகலப்பில் ஈடுபட்டனர். லாரிகளை வழிமறித்து அதற்குள் இருந்த அத்தியாவசியப் பொருட்களைத் திருடிச் சென்றனர்.
வெனிசுவேலாவைப் பணவீக்கம் உலுக்கி உள்ள நிலையில் அதன் நாணயம் செல்லாக் காசாக மாறி வருகிறது. இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் புதிய நோட்டுகளை அறிமுகம் செய்ய முயன்று வருகிறது. புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பு பழைய நோட்டுகள் செல்லாது என்று அந்நாட்டு அதிபர் அறிவித்ததால் பிரச்சினை தலைதூக்கியது. உணவு வாங்கவும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகப் பொருட்களை வாங்கவும் பொதுமக்களிடம் பணம் இல்லாததால் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.