ஹாங்காங்: கிட்டத்தட்ட நான்கு மாத காலமாக போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் சமூகக் கலந்துரையாடல் மூலமாக பொதுமக்களைச் சந்தித்து, பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார்.
வான் சாய் பகுதியில் அமைந்துள்ள குவீன் எலிசபெத் அரங்கில் அடுத்த வாரம் வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் திருவாட்டி கேரி லாமும் உயரதிகாரிகள் சிலரும் கலந்துகொள்வர் என அறிக்கை மூலமாக ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது.
கலந்துரையாடலில் பங்கேற்க வருவோர் குடைகள், ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் 150 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்றும் இதில் பங்கேற்க விருப்ம்புவோர் வரும் திங்கட்கிழமைக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகமான விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் குலுக்கல் முறையில் 150 பேர் தேர்வு செய்யப்படுவர்.
குறிப்பிட்ட சில சம்பவங்களில், குற்றவாளிகளைச் சீனாவிற்குக் கொண்டுசென்று விசாரிக்க வகைசெய்யும் விதமாக தாக்கல் செய்யப்பட்ட நாடு கடத்தல் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, அந்த மசோதா திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுவதாக திருவாட்டி லேம் அறிவித்தார். ஆயினும், போராட்டத்தின்போது போலிஸ் அத்துமீறியதாகத் தொடரப்பட்ட புகார்கள் குறித்து தன்னிச்சையான விசாரணை தேவை என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட மறுத்து வருகின்றனர்.
இதனிடையே, ஜோஷுவா வோங், பாடகர் டெனிஸ் ஹோ உள்ளிட்ட ஹாங்காங் போராட்ட ஏற்பாட்டாளர்களை அமெரிக்காவிற்கு வரவழைத்து, சந்தித்துப் பேசியதற்காக அமெரிக்க நாடாளுமன்றத் தலைவர் நான்சி பெலோசிக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு திருவாட்டி பெலோசி ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், போராட்டக்காரர்களைத் தூண்டிவிடுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அமெரிக்காவிற்கு சீனா அறிவுறுத்தியுள்ளது.