நியூயார்க்: உலக அளவில் கொரோனா கிருமி பரவல் ஏற்படுத்திய பாதிப்பாலும் எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாகவும் உலகில் உணவு விலைகள் கடந்த மார்ச் மாதம் கடும் வீழ்ச்சி கண்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு, வேளாண் நிறுவனம் கூறியுள்ளது.
அந்த நிறுவனம் மாதந்தோறும் குறிப்பிட்ட உணவு வகைகளின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் உணவு விலைக் குறியீடு ஒன்றை வெளியிடுகிறது. அதில் தானிய வகைகள், பாலிலிருந்து செய்யப்படும் பொருட்கள், இறைச்சி, சீனி போன்றவை அடக்கம்.
இந்தக் குறியீடு சென்ற மாதம் 172.2 புள்ளிகளாக இருந்தது. ஒப்புநோக்க, இது பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் 4.3% குறைவு என்று ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
“இந்த விலை வீழ்ச்சி இந்தப் பொருட்களுக்கான தேவையைப் பொறுத்தது. அந்தத் தேவையின் அளவு பொருளியல் நிலைமை மோசமடைவதால் பாதிக்கப்படுகிறது,” என்று ஐநாவின் உணவு, வேளாண் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணரான அப்துல் ரேசா என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உலகின் தானிய உற்பத்தியும் அதிகரிக்கும் என்று ஐநாவின் உணவு நிறுவனம் கணக்கிடுகிறது. அதன்படி, சென்ற ஆண்டு 2,721 பில்லியன் டன் தானிய உற்பத்தி ஏற்பட்டதாகவும் இது முந்தைய கணிப்பான 2,719 டன்னை விட அதிகம் என்றும் அது கூறுகிறது. மேலும் இது அதற்கு முந்தைய ஆண்டான 2018ல் உற்பத்தியான தானியத்தைவிட 2.4% அதிகம் என்றும் அது கூறுகிறது. இதில் சீனியின் விலைதான் மிக அதிகமாக, 19.1%, வீழ்ச்சி கண்டுள்ளதாக அந்த நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதேபோல், செம்பனை எண்ணெய் வீழ்ச்சியால் காய்கறிகளின் விலையும் 12% வீழ்ச்சி கண்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வீழ்ச்சிக்கு கொரோனா கிருமி பரவலால் பல நாடுகள் முடக்க நிலையில் இருப்பதாலும் எண்ணெய் விலை வீழ்ச்சியால் எண்ணெய் வள நாடுகளின் காய்கறித் தேவை குைறந்ததும் காரணங்களாக அந்த நிறுவனம் கூறுகிறது.
“எண்ணெய் விலை பாதிக்கு பாதி வீழ்ந்துவிட்டது. இதனால், உணவுச் சந்தையில், சீனி, தாவர எண்ணெய் வகைகளுக்கான தேவை குறைந்துள்ளது,” என்று ஐநாவின் உணவு, வேளாண் நிறுவனத்தின் ஆய்வாளர் பீட்டர் தோனெஸ் கூறுகிறார்.
இதேபோல், பால் பொருட்களின் விலை, தானியங்களின் விலை ஆகியவையும் வீழ்ச்சி கண்டுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டுகிறது.