நியூசிலாந்து: அனைத்துக் கட்டுப்பாடும் அடுத்த வாரம் தளர்த்தப்படும்
வெலிங்டன்: நியூசிலாந்தில் மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் அடுத்த வாரம் நீக்கப்படக்கூடும் என்று நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் கிருமிப் பரவல் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் நியூசிலாந்து எச்சரிக்கை நிலை 1க்கு செல்ல முடியும் என்ற அவர், அனைத்து சமூக தொலைதூர நடவடிக்கைகள் மற்றும் மக்கள் பெருமளவில் கூடுவது தொடர்பான தடைகள் நீக்கப்படும் என்றார். ஆனால் எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.
“வெகு விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிய உலக நாடுகளில் ஒன்றாக நாம் இருப்போம்,” என்று ஆர்டெர்ன் கூறினார்.
மருத்துவர்களுக்கு என்95 முகக்கவசமே நல்ல பலன் தரும் - அமெரிக்கா பரிந்துரை
லண்டன்: கொரோனா தொற்றில் இருந்து மருத்துவர்களைப் பாதுகாக்க அறுவை சிகிச்சை முகக்கவசங்களைவிட என்95 முகக்கவசங்களே சிறந்தது என்று ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் மிக்கல்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆய்வு தெரிவிக்கிறது.
தாதிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் என்95 முகக்கவசம் அணிவதற்கு உலக சுகாதார அமைப்பும் அமெரிக்க தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையமும் பரிந்துரைக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது. முன்னதாக சுகாதார ஊழியர்களுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசம் போதுமானது என்று உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது.
மலேசியாவில் தொடர்ந்து 11வது நாளாக உயிரிழப்பு இல்லை
புத்ரஜெயா: மலேசியாவில் நேற்று மேலும் 20 பேருக்கு கிருமித் தொற்று அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து மலேசியாவில் மொத்தம் 7,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 11வது நாளாக மரணம் ஏதும் நிகழவில்லை.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 20 பாதிப்புகளில் 15 பேர் வெளிநாட்டினர். 2 பேர் மலேசியர்கள். இன்று 66 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,470ஆக உயர்ந்தது.
1,292 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.