தெலுங்கானாவில் இருந்து கட்டுமான வேலைக்காக துபாய்க்கு சென்ற 42 வயது ஒட்னாலா ராஜேஷ் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அங்குள்ள துபாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் 80 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டியிருந்தது.
சிகிச்சை முடிந்து வீடு திரும்ப வேண்டிய நேரத்தில் அவர் மருந்துவமனைக்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ. 1.52 கோடி (சுமார் 762,555 அராபிய சிற்றரசு திர்ஹாம்) எனத் தெரிவிக்கப்பட்டது.
கட்டுமான ஊழியரான ராஜேஷால் அந்தத் தொகையைச் செலுத்த முடியவில்லை.
இதனை அறிந்த, தொண்டூழிய அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு தூதர ஹர்ஜீத் சிங்கிடம் தகவலைத் தெரிவித்தனர்.
இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்துக்கு ராஜேஷின் நிலைமை குறித்து விவரித்து திரு சிங் கடிதம் எழுதினார். கடிதத்தை ஏற்றுக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தது.
விமானச் சீட்டு வாங்கிக் கொடுத்து, வழிச்செலவுக்குப் பணம் கொடுத்து ராஜேஷை ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தனர் அந்த தன்னார்வலர்கள்.
கடந்த புதன் கிழமை ஹைதராபாத்துக்கு சென்று சேர்ந்த ராஜேஷ், 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.