அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரிலுள்ள சீனத் துணைத் தூதரகத்தை மூட கடந்த செவ்வாயன்று அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டதற்கு பதிலடியாக சீனா இன்று செங்டு நகரிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, சீனாவின் துணை தூதரகம் மூட உத்தரவிட்டது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவு அைமச்சர் மைக் பொம்பியோ, சீனா அெமரிக்கர்களின் அறிவுசார் சொத்தைத் திருடுவதில் ஈடுபட்டிருந்ததாகக் குற்றம்சாட்டினார்.
செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூடும் உத்தரவு குறித்து சீன வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க அரசாங்கம் எடுத்துள்ள நியாயமற்ற நடவடிக்கைகளுக்கு சீனா எடுத்துள்ள நியாயமான, தேவையான பதில் நடவடிக்கை என்று தனது முடிவை வர்ணித்தது.
“அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது நிலவும் சூழ்நிலையை சீனா விரும்பவில்லை. ஆனால் இதற்கு அமெரிக்காவே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்,” என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
கடந்த 1985ஆம் ஆண்டு திறக்கப்பட்ட செங்டு துணைத் தூதரகம் திபெத்திற்கு அருகில் இருப்பதால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அங்கு தற்பொழுது 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு நிலவரத்தில் கலிஃபோர்னியாவின் ரிச்சர்ட் நிக்சன் நூலகத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, சீன மக்களும் உலகின் மற்ற சுதந்திர நாடுகளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் போக்கை மாற்றியமைக்க ஒன்றுசேருமாறு அறைகூவல் விடுத்தார்.
“இந்தப் புதிய கொடுங்கோன்மையை சுதந்திர உலகம் எதிர்த்து வெற்றிகொள்ள வேண்டும். சுதந்திர உலகம் கம்யூனிஸ்ட் சீனாவை மாற்றவில்லை எனில் அது நம்மை மாற்றிவிடும்,” என எச்சரித்தார்.