வாஷிங்டன்: அமெரிக்கத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தேர்தலில் தம்மை எதிர்த்து நிற்கும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனுக்கு எதிராக ஆதரவு திரட்ட நியூ ஹேம்ஷியருக்கு நேற்று பிரசாரப் பயணம் மேற்கொண்டார். இந்த மாநிலம், 2016ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் டிரம்ப்பின் கையை விட்டு நழுவியது. நேற்றைய பிரசாரப் பயணத்தின் மூலம், எப்படியும் அந்த மாநிலத்தின் ஆதரவை இந்தத் தேர்தலில் பெற்றுவிட வேண்டும் என்பதில் திரு டிரம்ப் தீவிரம் காட்டுவது புலனாகியுள்ளது.
தேசிய அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் திரு பைடனே முன்னணியில் உள்ளார். இதனை முறியடிப்பதற்காக மிக முக்கியமாக விளங்கும் மாநிலங்களை அதிபர் டிரம்ப் ஆதரவுக்காக முற்றுகையிட்டு வருகிறார். முன்னதாக சுமார் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஹில்லரி கிளிண்டனிடம் நியூ ஹேம்ஷியரை இழந்தார் திரு டிரம்ப்.
இந்நிலையில், மக்களின் மனதை மாற்ற நேரமும் வாய்ப்புகளும் திரு டிரம்புக்குச் சாதகமாக இருப்பதாகத் தெரியவில்லை. தேர்தலில் அதிக வாக்காளர்களின் எண்ணிக்கை காரணமாகத் தொடங்கப்பட்ட முன்வாக்களிப்பு முறையால் 56.5 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் நேரடியாக அல்லது அஞ்சல் வழியாக தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர்.
திரு டிரம்பும் அதேபோல் தம் இருப்பிடமான ஃபுளோரிடாவில் நேற்று முன்தினம் வாக்களித்துவிட்டு நார்த் கரோலினா, ஓஹாயோ, விஸ்கோன்சின் ஆகிய மாநிலங்களில் பிரசாரம் நடத்த விரைந்தார்.கொரோனா கொள்ளைநோய் கூடிய விரைவில் ஒரு முடிவுக்கு வருவதாக உறுதியளித்த திரு டிரம்ப், திரு பைடன் கூடுதல் கொவிட்-19 கட்டுப்பாடுகளை விதித்து பலரது வேலைகளுக்கு மிரட்டல் அளிப்பார் என்று எச்சரித்தார்.
‘நண்பர்களைப் பற்றி இப்படியா பேசுவது’
இந்தியாவைப் பற்றி இறுதி விவாதத்தில் பேசிய அதிபர் டிரம்ப், “காற்று மாசுபட்ட இந்தியா” என்று குறிப்பிட்டதன் தொடர்பில் நேற்று முன்தினம் திரு பைடன் டுவிட் செய்திருந்தார்.
“அதிபர் டிரம்ப் இந்தியா அசுத்தமானது என்றார். நண்பர்களைப் பற்றி பேசும் முறை இதுவல்ல. பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்க இது வழியும் அல்ல,” என்று அதில் பதிவிட்டிருந்தார்.
தம்முடன் தேர்தலில் நிற்கும் கமலா ஹாரிஸ், இந்திய வம்சா வளியினர் என்று குறிப்பிட்ட திரு பைடன், அவர்களுக்கிடையே உள்ள பங்காளித்துவத்தைத் தாங்கள் இருவரும் பெரிதும் மதிப்பதாகவும் மீண்டும் வெளிநாட்டுக் கொள்கையின் மதிப்பை முன்நிறுத்துவர் என்றும் கூறினார்.
இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் தேசிய பாதுகாப்பு உத்திக்கு முக்கியமாகக் கருதி இந்தியாவை அணுகி வரும் அதிபர் டிரம்பிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்தது விசித்திரமாக உள்ளதென காங்கிரஸ் உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ மற்றும் தற்காப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் இவ்வாரம் இந்தியாவுக்குச் சென்று அந்நாட்டு அமைச்சர்களுடன் சந்திப்பு நிகழ்த்தவுள்ளனர். இவ்வேளையில் திரு டிரம்ப்பின் பேச்சு பொருந்தாத ஒன்றாக உள்ளதெனக் கூறப்பட்டது.
திரு டிரம்ப்பின் விவாதப் பேச்சுக்குப் பிறகு, இந்திய அமெரிக்கர்கள் கொதித்தெழுந்தனர். வாக்களிக்கத் தகுதிபெறும் இந்திய அமெரிக்கர்கள் சுமார் 1.9 மில்லியன் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 72 விழுக்காட்டினர் திரு பைடனுக்கு வாக்களிக்க ஆதரவு தெரிவித்ததாக முடிவுகள் கூறின.
தேர்தல் பிரசாரமும் கொள்ளை நோயும் மோதும் நிலை
இதற்கிடையே, அமெரிக்காவின் கொவிட்-19 சம்பவங்களும் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே போகின்றன.
தேர்தலும் கொள்ளைநோய் சூழலும் ஒரே நேரத்தில் அமைந்துவிட்ட நிலையில் வெள்ளிக்கிழமையன்று என்றும் இல்லாத அளவில் புதிதாக 83,757 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின.
அதிபர் டிரம்ப் தம் பேரணிகளை முக்கிய மாநிலங்களில் அதிகரித்துள்ள நிலையில் அதிக எண்ணிக்கையில் கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதியாகி வருகின்றன.
ஃபுளோரிடாவில் பெருங்கூட்டமாக வந்த இவரது ஆதரவாளர்களில் பலர் முகக் கவசம் அணியாமல் இருந்ததாகக் கூறப்பட்டது. டிரம்ப் ஆதரவாளர்கள் கொள்ளை நோயைக் காட்டிலும் பொருளியல் மீதே அதிக அக்கறை கொண்டுள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
இதுவரை குறைந்தது 8.8 மில்லியன் கிருமித்தொற்று சம்பவங்களும் 230,085 கொரோனா உயிரிழப்புகளும் அமெரிக்காவில் பதிவாகிவிட்டன.
(படம்: ஏஎஃப்பி)