மூன்றாவது முறையாகக் காணாமல் போயுள்ளது US$10 மில்லியன் மதிப்பிலான இந்த ஓவியம்.
மதுபானப் புட்டியுடன் இரு சிறுவர்கள் சிரிக்கும் இந்த ஓவியத்தை வரைந்தவர் ஃபிரான்ஸ் ஹால்ஸ். இந்த ஓவியம் கடந்த 248 ஆண்டுகளின் ‘பெரும்பாலான நேரங்களில்’ நெதர்லாந்தின் லீர்டாமில் உள்ள ஒரு சிறிய அருங்காட்சியகத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.
சில சமயங்களில் சில நிகழ்வுகளுக்காக வெளியே எடுத்துச் செல்லப்பட்டதுடன், நாசிக்கள் படையெடுப்பின்போது பாதுகாப்பாக வைக்கப்படுவதற்காக வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது போக, மூன்று முறை திருடப்பட்டும் அந்த ஓவியம் அருங்காட்சியகத்தை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திரு ஹால்ஸின் 354வது நினைவு நாளையொட்டி ஓவியம் வெளியில் எடுக்கப்பட்டபோது மூன்றாவது முறையாகக் காணாமல் போனது. நள்ளிரவு வேளையில் இருவர் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்ததைக் காட்டும் காணொளிப் பதிவுகள் சிக்கியுள்ளன. விசாரணை தொடர்கிறது.
வேறு எந்த கலைப் பொருளும் இப்படி பலமுறை திருடப்பட்டிருக்குமா என்பது தெரியவில்லை.
பொதுவாக, ஒரு முறை திருட்டுப் போன ஓவியம் மீண்டும் மீண்டும் திருடு போவது புதிதல்ல என்கின்றனர் கருத்தாய்வாளர்கள்.
லண்டனில் உள்ள டல்விச் பிக்சர் கேலரியிலிருந்து ஜேக்கோப் டி கெயின் III எனும் ஓவியம் 1967 முதல் 1983 வரையிலான காலகட்டத்தில் நான்கு முறை காணாமல் போயுள்ளது.