லண்டன்: வீடு வீடாக சென்று கிட்டத்தட்ட 80,000 பேருக்கு கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தும் பணியை பிரிட்டன் நேற்று தொடங்கியது. தென்னாப்பிரிக்க வகை கொவிட்-19 என்று அழைக்கப்படும் உருமாறிய கிருமி பரவுவதைத் தடுக்க இந்த முயற்சியில் பிரிட்டன் இறங்கியுள்ளது.
இந்த வகை கிருமித்தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதியன்று முதன்முதலாக பிரிட்டனில் தலைதூக்கியது. இதுவரை மொத்தம் 105 பேர் அந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டனில் உள்ள எட்டு வட்டாரங்களில் வசிப்பவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். ஒவ்வொரு வட்டாரத்திலும் ஏறத்தாழ 10,000 பேர் வசிக்கின்றனர். இந்த வட்டாரங்கள் தலைநகர் லண்டன், தென்கிழக்கு இங்கிலாந்து, மத்திய இங்கிலாந்து, கிழக்கு இங்கிலாந்து, வடமேற்கு இங்கிலாந்தில் உள்ளன.
பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் வசிப்பவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். அவர்களிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். சமூக அளவில் பாதிப்பைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. “நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. மிகவும் ஆபத்துமிக்க கட்டத்தில் உள்ளோம். உருமாறிய கிருமிகளும் பரவி வருகின்றன,” என்று ஸ்காய் செய்தி நிறுவனத்திடம் பிரட்டிஷ் கல்வித் துணை அமைச்சர் மிஷெல் டோனெலன் தெரிவித்தார்.