மணிலா: ஆசிய நாடுகள் சிலவற்றில் மீண்டும் கொரோனா அலை வீசத் தொடங்கியுள்ளது.
உலகில் பல நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில், இந்தியா, பிலிப்பீன்ஸ் போன்ற ஆசிய நாடுகளில் நாளுக்கு நாள் கிருமித் தொற்று அதிகரித்து வருகிறது. இதை அடுத்து, கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு, கடும் கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகளை அந்நாடுகள் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த நான்கு நாள்களாக ஒருநாள் பாதிப்பு நூறாயிரத்திற்கு மேல் பதிவாகியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலத்தில் நாளொன்றுக்கு 50,000க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகம் பரவக்கூடிய, புதிய உருமாறிய கிருமியே இதற்குக் காரணம் என்று இந்திய பொதுச் சுகாதார அறநிறுவனத்தின் நோய்த்தொற்றியல் பேராசிரியர் டாக்டர் கிரிதர பாபு கூறினார்.
"இப்போதைக்கு கொரோனா தொற்று உச்சத்தை எட்டுவதாகத் தெரியவில்லை. இம்மாத இறுதி அல்லது மே தொடக்கம்வரை கொரோனா தொற்று ஏறுமுகத்தில் இருக்கும்," என்றார் அவர்.
இரட்டை உருமாற்றக் கிருமி குறித்து இந்திய சுகாதார அமைச்சு கடந்த மாதம் அறிவித்தது. அந்தப் புதிய திரிபு, மற்றவற்றைவிட வேகமாகப் பரவக்கூடியதா என்பது தெரியவில்லை.
பிலிப்பீன்சில் மார்ச் மாத நடுப்பகுதியில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்ததை அடுத்து, தலைநகர் மணிலாவிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் இன்றுவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கும் சென்ற மாதத்தில் புதிய உருமாறிய கிருமி கண்டுபிடிக்கப்பட்டது.
அந்நாட்டில் புதிய உச்சமாக நேற்று முன்தினம் 401 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்தனர்.
அதேபோல, தென்கொரியாவிலும் கொரோனா 4வது அலை வீசத் தொடங்கிவிட்டதாக அச்சம் நிலவுகிறது. கடந்த வியாழனன்று அங்கு புதிதாக 700 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
தாய்லாந்தில் இவ்வாரம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கவிருக்கும் நிலையில் அங்கும் கொரோனா அலை மீண்டும் வீசுவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
'தட்டுப்பாட்டால் கட்டுப்பாடு'
இதனிடையே, தடுப்பூசி தட்டுப்பாட்டாலும் பக்கவிளைவுகள் காரணமாக ஒரு சில நிறுவனங்களின் தடுப்பூசிகளைப் போடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாலும் கொலம்பியா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகளிலும் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்லோவேனியா போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.