சோல்: தென்கொரியாவில் டெல்டா வகை கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வரும் நிலையில், நேற்று அங்கு அன்றாட கிருமித்தொற்று சம்பவங்கள் ஆக அதிக எண்ணிக்கையில் பதிவாயின.
அங்கு முடக்கநிலை இல்லை என்றாலும் தீவிர பரிசோதனை மற்றும் தொடர்பு தடமறிதல் ஆகியவற்றின் காரணமாக நாடு தழுவிய அளவில் கிருமிப் பரவல் விகிதம் ஓரளவுக்குக் குறைவாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் 2,381 கிருமித்தொற்று மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட மரபணு பகுப்பாய்வில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு டெல்டா வகை தொற்று என்று கண்டறியப்பட்டதாக கொரியா நோய் கட்டுப்பாடு, தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் முதல் அங்கு 1,741 டெல்டா வகை தொற்று சம்பவங்கள் பதிவானது. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை கடந்த வாரம் கண்டறியப்பட்டவையாகும்.
கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்
படுவோர் எண்ணிக்கையோ அல்லது உயிரிழப்போ குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை. இறப்பு விகிதம் 1.13 விழுக்காடாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 214ஆகவும் உள்ளது.
தென்கொரியாவின் 52 மில்லியன் மக்களில், 32 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு முறையாவது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
செப்டம்பர் மாதத்திற்குள் 70 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட அந்நாட்டு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.