பேங்காக்: எந்த ஒரு நாட்டவராக இருப்பினும் முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டிருப்பின் புக்கெட் தீவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என்று தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலையில், சுற்றுப்பயணிகளை அனுமதிக்கும்விதமாக ‘சேண்ட்பாக்ஸ்’ திட்டத்தைத் தாய்லாந்து அறிவித்தது. அதன்படி, கொரோனா தொற்று அபாயம் குறைவாகவும் மிதமாகவும் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள், முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தால் புக்கெட் தீவிற்கு வருகைபுரியலாம். அங்கு 14 நாள்களைக் கழித்தபின், தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி தாய்லாந்தின் மற்ற பகுதிகளுக்கு அவர்கள் செல்ல முடியும்.
இந்நிலையில், 14 நாள்கள் என்ற அந்த நிபந்தனை, கடந்த வாரம் ஏழு நாள்களாகக் குறைக்கப்பட்டது.
இந்த ‘சேண்ட்பாக்ஸ்’ திட்டம், ஏற்கெனவே கிட்டத்தட்ட 80 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தாய்லாந்து சுற்றுப்பயண ஆணையம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்த ‘சேண்ட்பாக்ஸ்’ திட்டத்தின்மூலம் ஏற்கெனவே 38,000க்கும் மேற்பட்ட சுற்றுப்பயணிகளை புக்கெட் தீவு ஈர்த்துள்ளது.