கோலாலம்பூர்: ஓமிக்ரான் தொற்றுள்ள அல்லது கிருமித்தொற்று ஆபத்து அதிகமுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மலேசியா தற்காலிகத் தடை விதித்தது.
சுகாதார அமைச்சர் இது பற்றிய விவரங் களை நேற்று வெளியிட்டார்.
தென் ஆப்பிரிக்க நாடுகளில் அதிவேகத்தில் பரவக்கூடிய புதிய உருமாறிய ஓமிக்ரான் கிருமி கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து குறிப்பிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு பல நாடுகள் தடை விதித்து வருகின்றன. அந்த வரிசையில் மலேசியாவும் தற்போது சேர்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா, ஸிம்பாப்வே, மொஸாம்பிக் உட்பட எட்டு ஆப்பிரிக்க நாடுகளுக்கு தடை பொருந்தும். புதிய கிருமி மற்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டால் தடை விரிவு படுத்தப்படும் என்று மலேசியா கூறியுள்ளது.
ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 'விடிஎல்' எனப்படும் சிறப்பு பயண ஏற்பாடுகள் செய்வதையும் மலேசியா ஒத்திவைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போட்டிருந்தாலும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து திரும்பும் மலேசியர்கள் மற்றும் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
"ஓமிக்ரான் உருமாறிய கிருமிப் பற்றி அதிக விவரங்கள் தெரியும் வரை இந்தத் தடைகள் தற்காலிகமாக அமலில் இருக்கும்," என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். மலேசியா தனது எல்லைகளை படிப்படியாகத் திறந்துவரும் வேளையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மலேசியாவில் இதுவரை ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.