அமெரிக்காவில் இவ்வாண்டு சுமார் 345,000 விமானப் பயணங்கள் வரை தாமதம் அடையலாம் என்று அங்குள்ள விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
அந்தத் தாமதத்தால் 32 மில்லியன் விமானப் பயணிகள் பாதிக்கப்படலாம் என்றும் அவை கூறியுள்ளன.
அமெரிக்காவில் தொடங்கப்படவுள்ள 5ஜி அலைக்கற்றைச் சேவைகள்தான் அதற்குக் காரணமாய் இருக்கும் என்று விமான நிறுவனங்கள் சொல்கின்றன.
அமெரிக்காவில் ஜனவரி 5 (புதன்கிழமை) அன்று 5ஜி கைபேசி அலைக்கற்றைச் சேவைகள் தொடங்கவுள்ளன.
ஆனால் 5ஜி தொழில்நுட்பம், விமானங்களில் உள்ள மின்னியல் சாதனங்களின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்று அமெரிக்க விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
அதனால் அவற்றின் நெருக்குதலுக்கு இணங்க, 5ஜி சேவைகளைத் தள்ளி வைக்கும்படி அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களை சனிக்கிழமை (ஜனவரி 1) அன்று கேட்டுக்கொண்டது.
ஆனால் ஏ டி அன்ட் டி (AT&T), வெரிஸோன் (Verizon) ஆகிய அமெரிக்காவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அந்தக் கோரிக்கையை நிராகரித்தன.
5ஜி சேவைகளைத் தள்ளிப் போட்டால் பல மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது அவற்றின் வாதம்.
வேண்டுமானால் சில விமான நிலையங்களின் அருகில் ஆறு மாதத்துக்கு 5ஜி சேவையை நிறுத்தி லைக்கலாம் என்று நிறுவனங்கள் கூறின.
இதை அடுத்து, விமானச் சாதனங்களில் கோளாறு ஏற்பட்டால் பல்லாயிரம் விமானச் சேவைகள் இவ்வாண்டு தாமதமாகக் கூடும் என்று அமெரிக்க விமான நிறுவனங்களை பிரதிநிதிக்கும் சங்கம் தெரிவித்துள்ளது.
விமானச் சேவை தாமதங்களால் 2.1பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படலாம் என்றும் அது மதிப்பிட்டது.
5ஜி சேவைகள் பயன்படுத்தும் அலைக்கற்றையால் சில நேரங்களில் விமானங்கள் தரையிறங்குவது பாதுகாப்பற்று போகும் என்று விமான நிறுவனங்களும் விமானத் தயாரிப்பு நிறுவனங்களும் கூறியுள்ளன.
ஆனால் அவை அச்சப்படுவது போல 5ஜி சேவைகள் விமானங்களின் மின்னியல் கட்டமைப்புக்கு இடையூறு ஏற்படுத்தாது என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறுகின்றன.