சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் சில விமானிகள் பணியில் தவறு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நிறுவனம் அண்மையில் குறிப்பு ஒன்றை அலுவலகத்திற்குள் அனுப்பியது.
அந்தக் குறிப்பில் சில விமானிகள் செய்யும் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்களான சிட்னி மார்னிங் ஹெரால்ட், மெல்பர்ன்ஸ் ஏஜ் ஆகியவை தெரிவித்தன.
கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பணிக்குத் திரும்பியுள்ள குவான்டாஸின் அனைத்து விமானிகளும் வழக்க நிலைக்குத் திரும்பவில்லை. இன்னமும் சில விமானிகள் தவறு செய்வதாகக் கூறப்படு கிறது.
பிரேக்கை விலக்காமல் விமானத்தைக் கிளப்புவது, விமானம் பறக்கும் உயரத்தை வேகம் என்று தவறாக எடுத்துக் கொள்வது போன்ற தவறு கள் அந்தக் குறிப்பில் பட்டியலிடப் பட்டுள்ளன.
விமானி அறையில் உள்ள விசைகள் தவறான நிலையில் இருப்பதாகவும் விமானிகள் சூழ்நிலைக்குத் தேவையான விழிப்புணர்வை இழந்துவிட்டதை உணரவில்லை என்றும் குறிப்பு தெரிவிக்கிறது.
தொற்று காரணமாக விமானங்கள் பறக்காததால் விமானிகளுக்கு அனுபவக்குறைபாடு ஏற்பட்டு உள்ளதாக அந்தக் குறிப்பை அனுப்பிய குவாண்டாசின் விமான செயல்பாட்டு அதிகாரி தெரிவித்து உள்ளார்.
"உலகெங்கும் உள்ள விமான நிறுவனங்கள் கொவிட்-19 தொற்றுக்கு முந்தைய நிலையை அடை வதற்கு சிக்கலான நடைமுறைகளை எடுத்து வருகின்றன.
அவற்றில் விமானிகளை வழக்கநிலைக்குக் கொண்டு வருவதும் அடங்கும் என்று குவாண்டாஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
"விமானத் துறை எதிர்பாராத சவால்களை எதிர்நோக்கும் வேளையில் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்குத்தான் நாங்கள் முன்னுரிமை வழங்குவோம். எங்களுடைய விமானிகள் பாதுகாப்புக்குத் தேவையான திறன் களுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டு வருகின்றனர்," என்று அந்தப் பேச்சாளர் மேலும் சொன்னார்.