சிட்னி: ஆஸ்திரேலிய குடிநுழைவு படிவத்தில் தவறான தகவல் அளிக்கப்பட்டதை செர்பியா டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச் ஒப்புக்கொண்டார்.
அரசாங்கத்திடம் தற்போது சரியான தகவல்களைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
டிசம்பர் 16அம் தேதி கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்ட அவர், தடுப்பூசி விலக்கின்கீழ் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்டார்.
ஆனால், அண்மைய தொற்றுக்குத் தடுப்பூசி விலக்கு கிடையாது என்று மறுத்துவிட்ட குடிநுழைவு அதிகாரிகள் அவரைத் தடுப்பு மையத்தில் தங்கவைத்தனர்.
ஆனால், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஜோக்கோவிச், ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கு அனுமதித்தது.
ஆனால், வேறு சில சந்தேகங்கள் எழுந்துள்ளதால், ஜோக்கோவிச்சின் விசாவை மீண்டும் ரத்து செய்வது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலித்து வந்தது.
தொற்று உறுதி செய்யப்பட்ட அடுத்த சில நாட்களில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதாகவும் செய்தியாளர் ஒருவரைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் நிகழ்ச்சிக்குப் பிறகுதான் தனக்கு தொற்று இருப்பது தெரியவந்தது என்ற அவர், செய்தியாளருடனான சந்திப்பைத் தவிர்த்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார்.
மேலும் பயண நுழைவு படிவத்தில், ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்குச் செல்வதற்கு 2 வாரங்களுக்குமுன் செர்பியா, ஸ்பெயின் ஆகியவற்றில்தான் இருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவர் அந்தக் கால கட்டத்தில் பெல்கிரேடிலிருந்து ஸ்பெயினுக்குச் சென்று, பின் ஆஸ்திரேலியா சென்றதைச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்கள் காட்டுகின்றன.
இதுகுறித்து விளக்கமளித்த அவர், ஆஸ்திரேலியா வருவதற்கு முந்திய பயணம் குறித்து தனது உதவியாளர் தவறான தகவலை அளித்துவிட்டதை ஒப்புக்கொண்டார்.