கோலாலம்பூர்: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மலேசியாவின் பத்துமலை முருகன் கோயிலில் பக்தர்கள் கடந்த வாரயிறுதி முதல் முருகனுக்குப் பால் குடக் காணிக்கையைச் செலுத்தி வருகின்றனர்.
கிருமிப் பரவல் காரணமாக பத்துமலையில் தைப்பூசத் திருவிழாவுக்குச் சிறப்புச் சேர்க்கும் காவடி ஊர்வலத்துக்கு இந்த ஆண்டு அனுமதி இல்லை.
அத்துடன் இவ்வாண்டு குறைவான பக்தர்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கிருமிப் பரவலுக்கு அஞ்சி பலர் பத்துமலைக்கு வரவில்லை என்று பக்தர்கள் சிலர் கூறினர்.
பல்லாயிரம் பேர் வந்த இடத்தில் பலநூறு பேர்தான் வருவதைப் பார்த்தபோது வருத்தம் அடைந்ததாக கிருஷ்ணன் கருப்பன் எனும் பக்தர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை பினாங்கில் தங்கம், வெள்ளி ஆகிய இரட்டைத் தேர் ஊர்வலம் நடைபெற்றது.
கடந்த ஆண்டு தேர் ஊர்வலம் நடைபெறாத நிலையில், மழைத் தூறிக் கொண்டிருந்தபோதும் தேர்களைப் பார்க்க பலநூறு பேர் வீதிகளில் குழுமியிருந்ததாக 'தி ஸ்டார்' ஊடகச் செய்தி கூறியது.