நியூயார்க்: கொவிட்-19 கிருமிப் பரவல் தொடங்கி ஈராண்டு ஆகிவிட்ட நிலையில், அது இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் தடுப்பூசி விநியோகம் சமமற்றதாக உள்ளதால் அது மேலும் நீடிக்கக்கூடும் என்று ஐநா எச்சரித்துள்ளது.
"உலகம் முழுவதும் 446 மில்லியன் பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மாண்டோர் எண்ணிக்கை ஆறு மில்லியனைக் கடந்துவிட்டது. மேலும் பலரின் மனநலம் மோசமடைந்து வருகிறது," என்றார் ஐநா தலைவர் அன்டோனியோ குட்ரேஸ்.
"அதே சமயம், இதுவரையில்லாத அளவுக்கு முன்னெடுக்கப்பட்ட பொதுச் சுகாதார நடவடிக்கைகள், துரிதமாக தயாரிக்கப்பட்டு மக்களுக்குப் போடப்பட்ட தடுப்பூசி ஆகியவற்றின் காரணமாக, உலகின் பல நாடுகள் கொள்ளைநோயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.
ஆனால், கொள்ளைநோய் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதுவது பெரும் தவறு," என்றும் அவர் சொன்னார்.
ஒவ்வொரு மாதமும் 1.5 பில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன என்றாலும் கிட்டத்தட்ட மூன்று பில்லியன் பேர் இன்னமும் முதல் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக காத்து கிடப்பதையும் அவர் சுட்டினார்.
"இது, ஏழை நாடுகளில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தைவிட பணக்கார நாடுகளில் உள்ள மக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கை முடிவுகளின் நேரடி விளைவு," என்றார் அவர்.
இதற்கிடையே, உலகச் சுகாதார நிறுவனம், கூடுதல் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தனது வலுவான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. அதே சமயம் பின்தங்கிய நாடுகளில் உள்ளவர்களுக்கு முதல் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அது சொன்னது.
பலர் முதல் தடுப்பூசியே போட்டுக் கொள்ளாமல் இருக்கும் நிலையில், கூடுதல் தடுப்பூசி போடுவதற்கு நிறுவனம் சென்ற ஆண்டு எதிர்ப்பு தெரிவித்தது. ஓமிக்ரான் பரவல் நோயெதிர்ப்புத் திறனை குறைத்துவிடுவதாக கூறப் படுவதற்கு இடையில், நிறுவனம் இவ்வாறு கூறியுள்ளது.