கோலாலம்பூர்: சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகள் ஏப்ரல் முதல் தேதி மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, ஜோகூர் பாருவில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இருந்தாலும், ஊழியர் பற்றாக்குறையால் அங்குள்ள பல வர்த்தகங்கள் சிரமப்பட்டு வருகின்றன.
மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு தற்போது வலுவாக இருப்பதால், ஜோகூர்வாசிகள் பலர் சிங்கப்பூரில் வேலை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்ற மாதம் 25ஆம் தேதி மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அன்று ஒரு வெள்ளிக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு 3.1665ஐ எட்டியது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் நாணயக் கொள்கையைக் கடுமையாக்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு சரிந்ததும் அதற்குக் காரணம்.
"கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை செய்து வந்த மலேசியர்களில் 80 விழுக்காட்டினர், எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, சிங்கப்பூரில் பணிபுரிய விரும்புகின்றனர். சிங்கப்பூர் வெள்ளிக்கும் ரிங்கிட்டுக்கும் இடையிலான நாணய மாற்று விகிதமே இதற்கு முக்கிய காரணம். இதனால், உள்ளூர் வர்த்தகங்களுக்கு ஆள்பற்றாக்குறை ஏற்படுகிறது," என்று மலேசிய வரவுசெலவு, வர்த்தக ஹோட்டல் சங்கத்தின் துணைத் தலைவர் ஸ்ரீ கணேஷ் மைக்கல் கூறினார்.
"ஹோட்டல் துறையில் இயங்கும் வர்த்தகங்கள் தாக்குப்பிடிக்க தீர்வுகளைத் தேடவேண்டும். இல்லாவிடில், வர்த்தகத்தை அவை இழுத்து மூட நேரிடும். மலேசிய அரசாங்கம் இதில் தலையிட்டு உதவ வேண்டும்," என்றும் அவர் சொன்னார்.
ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த ஜோகூர் எதிர்க்கட்சித் தலைவரான லியூ சின் டோங், மலேசிய ஊழியர்கள் சிங்கப்பூரில் பெறக்கூடிய சம்பளத்தில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கை வழங்குமாறு மாநில அரசாங்கத்திடமும் முதலாளிகளிடமும் வலியுறுத்தினார்.
"எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசிய ஊழியர் ஒருவருக்கு மாதச் சம்பளமாக 2,000 வெள்ளி வழங்கப்பட்டிருந்தால், 3,000 முதல் 4,000 ரிங்கிட் வரை சம்பளம் வழங்கினால் அவர் மலேசியாவில் வேலை செய்ய விரும்புவார்," என்று திரு லியூ விவரித்தார்.