நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 18 வயது இளைஞன் ஒருவன் 10 பேரைச் சுட்டுக்கொன்று விட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை 'இனவெறிக் குற்றம்' என்று வகைப்படுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளதாக செய்தியாளர் கூட்டத்தில் கூறப்பட்டது.
துப்பாக்கி ஏந்திய இளைஞன் 'டாப்ஸ்' பேரங்காடிக்கு வெளியே இருந்த வாகன நிறுத்துமிடத்தில் நால்வரைச் சுட்டதாகவும் பின்னர் பேரங்காடிக்குள் சென்று தாக்குதலைத் தொடர்ந்ததாகவும் கூறப்பட்டது. பேரங்காடியில் சுடப்பட்டவர்களில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஒருவரும் அடங்குவார்.
மாண்டவர் எண்ணிக்கை 10 என்றும் தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. இவர்களில் 11 பேர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஆவார் கள்.
அந்த இளைஞன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நேரலைக் காணொளியாக 'டுவிட்ச்' சமூக இணையத்தளம் வழியாக ஒளிபரப்பியதாகவும் கூறப்படுகிறது.
காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்தபோது, இளைஞன் தன் கழுத்தில் துப்பாக்கியை வைத்ததாகவும் பின்னர் காவலர்களுடன் பேசியதை அடுத்து சரணடைந்ததாகவும் கூறப்பட்டது.
தாக்குதலை நேரலையாக ஒளிபரப்பு செய்ய, தங்களின் 'டுவிட்ச்' சமூக இணையத்தளம் பயன்படுத்தப்பட்டதை அந்நிறுவனத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், வன்முறை தொடங்கி இரண்டு நிமிடங்களுக்குள் அந்த நேரடி ஒளிபரப்பைத் தாங்கள் அகற்றிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூட்டால் நேர்ந்த மரணங்கள் 19,350 ஆகும். 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 35% அதிகரிப்பாகும்.