மாலே (மாலத்தீவுகள்): மாலத் தீவுகளில் அனைத்துலக யோகா தினத்தையொட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மாலத்தீவுகளின் தலைநகர் மாலேயில் உள்ள விளையாட்டு அரங்கம் ஒன்றில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்த இதில் அரசாங்க அதிகாரிகள், அரசதந்திரிகள் உள்ளிட்ட 150 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்பாளர்களைத் தாக்கியதாகவும் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. யோகாசனம் இஸ்லாமிய சமயத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்ற கருத்தைத் தெரிவிக்கும் பலகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியதாகச் சொல்லப்படுகிறது. இஸ்லாம், இந்திய பெருங்கடலில் உள்ள மாலத் தீவுகளின் அதிகாரபூர்வ சமயம்.
கலவரத்தை அடக்கும் நடவடிக்கைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டனர். அதற்குப் பிறகு அவர்கள் கண்ணீர் புகையையும் மிளகு தெளிப்பானையும் பயன்படுத்தினர்.
இச்சம்பவத்தின் தொடர்பில் ஆகக் கடைசி நிலவரப்படி ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை கண்காணிப்பாளர் ஃபாத்மா நாஷ்வா சொன்னார்.தாக்குதல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டதாகவும் மாலத் தீவுகளின் அதிபர் இப்ராஹிம் முகம்மது சோலி தெரிவித்துள்ளார்.
"இச்சம்பவத்தை மிகுந்த கவலை தரும் ஒன்றாக நாங்கள் வகைப்படுத்துகிறோம். இதற்குப் பொறுப்பானவர்கள் விரைவில் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவர்," என்று அவர் டுவிட்டரில் குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதலைப் பற்றி பலர் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களின் கருத்துகளைத் தெரியப்படுத்தி வந்தனர்.