ஜகார்த்தா: சுமத்திரா, கலிமந்தான் ஆகிய பகுதிகளில் இருக்கும் தீ மூளக்கூடிய அபாயம் அதிகம் உள்ள ஆறு மாநிலங்களுக்கு இந்தோனீசியா 20க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. சென்ற வாரம் சில காடுகளிலும் தோட்டங்களிலும் சிறிய அளவில் தீ மூண்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டர்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அந்தத் தீயால் இந்த வட்டாரத்தில் மீண்டும் புகைமூட்டம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் தலைதூக்கியது. மழை, தீயணைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றால் அத்தகைய சூழல் உருவாகவில்லை என்று 'பிஎன்பிபி' எனப்படும் இந்தோனீசியாவின் தேசிய பேரிடர் தடுப்பு அமைப்பு கூறியது.
நிலைமையைக் கண்காணிக்கவும் தேவைப்பட்டால் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கவும் தனது ஹெலிகாப்டர்கள் பணியில் இறங்கத் தயார்நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் தடுப்பு அமைப்பு கூறியது. ரியாவ், ஜாம்பி, தென் சுமத்திரா, மேற்கு கலிமந்தான், மத்திய கலிமந்தான், தென் கலிமந்தான் ஆகிய பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் தயார்நிலையில் இருப்பதாக அமைப்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
மேற்கு கலிமந்தான், சுமத்திரா உள்ளிட்ட பகுதிகளின் சில இடங்களில் சென்ற வாரம் காட்டுத்தீ மூண்டது கண்டறியப்பட்டது. துணைக்கோளப் படங்களின் மூலம் அந்தத் தகவல் தெரியவந்ததாக 'ஏஎஸ்எம்சி' எனும் ஆசியான் சிறப்பு வானிலை நிலையம் சொன்னது. மேற்கு கலிமந்தான் பகுதியில் சிறிதளவு புகைமூட்டம் காணப்பட்டதாகவும் நிலையம் குறிப்பிட்டது.
எனினும், கடந்த வார இறுதியில் புகைமூட்டம் தென்படவில்லை.சிங்கப்பூருக்கு ஆக அருகில் இருக்கும் ரியாவ் மாநிலம் தொடர்ந்து மழைக்காலத்தை எதிர்நோக்கி வருகிறது.
காட்டுத் தீ ஏற்படக்கூடிய இந்தோனீசிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை