கோலாலம்பூர்: அம்னோ கட்சித் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி மலேசியப் பொதுத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஏதுவாக, நாடாளுமன்றத்தைக் கலைக்க அழைப்பு விடுத்தார்.
நேற்று கோலாலம்பூரில் நடந்த அம்னோ உறுப்பினர்களின் கட்சிக் கூட்டத்தில் 1,000த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இதில் கலந்துகொள்ளவில்லை என்று மலாய் மெயில் செய்தி கூறுகிறது. நஜிப்பின் மனைவி ரோஸ்மா, மகன், மகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஸாஹித், தானும் துணைத் தலைவர் முகமது ஹாசனும் அம்னோ உயர்மட்டத் தலைவர்களின் கூட்டத்தில் பொதுத் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து பேசப் போவதாகக் கூறினார்.
அம்னோ உயர்மட்டத் தலைவர்களின் கூட்டம் நேற்று இரவு நடைபெறுவதாக இருந்தது. இதில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
"எப்போது வேண்டுமானாலும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். அம்னோ ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க விரும்புவதால், பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கிறது.
"பாரிசான் நேஷனலின் வெற்றி, கட்சிக்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நஜிப்பின் போராட்டத்தை வலுப்படுத்துவதாக இருக்கும்," என்றார் அவர்.
மேலும் நஜிப்பிற்கு அரச மன்னிப்பு வழங்க கோரும் இயக்கம் ஒன்றை கட்சித் தொடங்கவுள்ளதாகவும் அவர் சொன்னார்.
பக்கத்தானுக்குச் சாதகம்
இதற்கிடையே, மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சிறை சென்றுள்ளது அவரது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்குச் சாதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார். இது அவரது கடைசிப் பொதுத் தேர்தலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
நஜிப் மீதான மற்ற குற்றச்சாட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவருக்கு விரைவில் அரச மன்னிப்பு வழங்குவதற்கான வாய்ப்புக் குறைவு என்றும் அவர் சொன்னார்.
நஜிப் சிறை சென்றுள்ள நிலையில், பொதுத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புக் குறைவு என்றும் அவர் சொன்னார்.
'50 விழுக்காட்டிற்கு மேல் கிடைக்காது'
வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியாலும் 50 விழுக்காட்டிற்கு மேற்பட்ட இடங்களைப் பெறமுடியாது என மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.
"இம்முறை அதிகமான கட்சிகள் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பிரதமராக வரவேண்டும் என்று விரும்புகின்றன," என்றார் அவர்.
பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அண்மையில் வேறு சில சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கிராக்கன் தானா ஆயர் என்ற கூட்டணியை மகாதீர் உருவாக்கி உள்ளார்.