கியவ்: உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததற்குச் சீன மூத்த அதிகாரி ஒருவர் ஆதரவு தெரிவித்ததாக ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரேன் நிலவரங்களை சீனா புரிந்துகொள்வதாகவும் இந்த விவகாரத்தில் ரஷ்யாவை அது ஆதரிப்பதாகவும் வெள்ளிக்கிழமை ரஷ்யாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மூத்த சீன அதிகாரி கூறியதாக அந்தக் கூட்டத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வ ரஷ்ய தரப்பு தெரிவித்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது நிலை தலைவரான லி ஸாங்ஷு, ரஷ்யாவின் தூரகிழக்கு நகரான விளாடிவஸ்டாக்கில் நடந்த பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொண்டார். ரஷ்ய அதிபர் புட்டினை சந்தித்தார். பிறகு அவர், சென்ற வாரம் மாஸ்கோவுக்கு சென்றார்.
விளாடிவஸ்டாக்கில் ரஷ்ய அதிபரை சந்தித்த சீனத் தலைவர், அதிபர் புட்டினை பெரிதும் பாராட்டினார். எவ்வளவு தடை விதித்தாலும் மீள்திறனுடன் அதை ரஷ்யா சாதித்து இருக்கிறது என்று சீனத் தலைவர் கூறினார்.
மாஸ்கோவில் ரஷ்ய தலைமைத்துவத்திற்கு தனது வலுவான ஆதரவை சீனத் தலைவர் தெரிவித்ததாக மாஸ்கோ தரப்பு கூறியது.
அமெரிக்காவும் அதன் நேட்டோ நாடுகளும் ரஷ்ய எல்லைகளுக்கு அருகே விரிவடையும் வேலைகளில் ஈடுபடுகின்றன. இதனால், ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பிற்கும் அதன் மக்களின் வாழ்விற்கும் கடும் மிரட்டல் விடுக்கப்படுவதாக சீனத் தலைவர் கூறியதாக ரஷ்ய நாடாளுமன்றத் தரப்பு தெரிவித்தது.
தன்னுடைய முக்கிய நலன்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் ரஷ்யா எடுக்கவேண்டி இருக்கிறது என்பதை சீனா முற்றிலும் புரிந்துகொள்கிறது என்றும் ரஷ்யாவுக்கு உதவிகளை அது வழங்குவதாகவும் அந்தச் சீனத் தலைவர் கூறி இருக்கிறார்.
இதனிடையே, உக்ரேனின் வடகிழக்குப் பகுதியில் அண்மையில் உக்ரேன் தரப்புகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தன.
உக்ரேனிய மூத்த அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளுடன் வேவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யாவின் பலவீனங்களைப் பற்றி சிறந்த முறையில் பொருத்தமான தகவல்களை அமெரிக்கா உக்ரேனுக்குத் தெரிவிக்க அந்த வேவுத் தகவல் பகிர்வு திட்டம் வழிவகுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
சீன அதிபரான ஸி ஜின்பிங் விரைவில் கஸகஸ்தான், பிறகு உஸ்பெகிஸ்தான் சென்று ரஷ்ய அதிபரை அங்கு சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பாதுகாப்பு நடவடிக்கையாக உக்ரேனின் ஸபோரிஸியா அணுசக்தி நிலையத்தின் செயல்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதாக அதற்கு பொறுப்பு வகிக்கும் எனர்கோட்டம் நேற்று சொன்னது.
ரஷ்யாவும் உக்ரேனும் நடத்தி வரும் தாக்குதல்களால், அங்கு அணுசக்தி பேரழிவு ஏற்படும் ஆபத்து நிலவுகிறது.