தெஹ்ரான்: ஈரானில் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகள் திடீரென நோய்வாய்ப்பட்டனர்.
சுயநினைவிழப்பு, குமட்டல், மூச்சுத் திணறல் போன்றவற்றால் அந்த மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
மாணவிகள் திடீரென நோய்வாய்ப்பட்டபோது பள்ளிகளில் இருவித துர்நாற்றம் வீசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவதியுற்ற மாணவிகளில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மர்மம் குறித்து ஈரானிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட பள்ளிகளைக் குறிவைத்து நச்சுக்காற்றுத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நாடெங்கும் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஈரானிய அரசாங்கத்துக்கு எதிரான அமைப்புகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.