சிட்னி: அமெரிக்காவிடமிருந்து ஆஸ்திரேலியா தொலைதூர ஏவுகணைகளை வாங்க வகைசெய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா, சீனாவின் ராணுவ பலத்தை எதிர்கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஒப்பந்தத்தின்கீழ் ஆஸ்திரேலியா, அமெரிக்காவிடமிருந்து 200 டொமஹாக் குரூஸ் மிசைல்ஸ் எனும் ஒருவகை ஏவுகணைகளை வாங்கவுள்ளது. அவற்றின் மதிப்பு 830 பில்லியன் அமெரிக்கன் டாலர் (1.13 பில்லியன் வெள்ளி).
அவை, ஆஸ்திரேலியாவிடம் இருக்கக்கூடிய ஆக சக்திவாய்ந்த, அதிநவீன ஆயுதங்களாக இருக்கும் என்று அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் பேட் கான்வோய் கூறியுள்ளார்.
தனது ராணுவத்தைப் பெரிய அளவில் மறுசீரமைக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியா இறங்கியுள்ளது. அது, சீனாவைக் கையாளும் நோக்குடன் தொலைதூரம் செல்லக்கூடிய ஆயுதங்களைத் தன்வசம் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
“ஏவுகணை யுகம் என்று பலர் கூறும் காலகட்டத்துக்குள் நாம் சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில் இத்தகைய ஆயுதங்கள் ஆஸ்திரேலியர்களைப் பாதுகாக்க முக்கியக் கருவிகளாக இருக்கும்,” என்று திரு கன்வோய் குறிப்பிட்டார்.
டொமஹாக் ஏவுகணைகள் 1,000 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் செல்லக்கூடியவை. ஆவை ஆஸ்திரேலியக் கடற்படைக்குச் சொந்தமான ஹொபார்ட் கிளாஸ் போர்க்கப்பல்களில் வைக்கப்பட்டிருக்கும்.
ஆக்கஸ் ஒப்பந்தத்தின்கீழ் ஆஸ்திரேலியா அணுவாயுத ஆற்றல் கொண்ட போர்க்கப்பல்கள் சிலவற்றைப் பெற்றது. வருங்காலத்தில் புதிய ஏவுகணைகளுடன் அந்தப் போர்க்கப்பல்களை அது பயன்படுத்தும்.
ஆஸ்திரேலியாவைத் தவிர பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள்தான் கணிசமான அளவில் டொமஹாக் ஏவுகணைகளை வைத்திருக்கின்றன. ஆக்கஸ் ஒப்பந்தத்தில் அவ்விரண்டும் ஆஸ்திரேலியாவின் பங்காளி நாடுகள்.
உள்நாட்டிலேயே ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்கான வசதியை ஏற்படுத்தித் தர கான்பெராவிற்கு உதவப்போவதாகவும் முன்னதாக வாஷிங்டன் அறிவித்திருந்தது.