பிலிப்பீன்ஸ் பல்கலைக் கழகத்தில் குண்டுவெடிப்பு; நால்வர் பலி; விழிப்புநிலையில் ராணுவம்
மணிலா: தெற்கு பிலிப்பீன்சில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததால் நாட்டின் ராணுவம் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். சிலர் உடல் உறுப்பு துண்டிக்கப்பட்டு துடித்தனர்.
மராவி நகரில் உள்ள மின்டானோ மாநில பல்கலைக் கழகத்தின் உடற்பயிற்சிக் கூடத்தில் கத்தோலிக்க பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தபோது வெடிகுண்டு வெடித்தது.
இது, ஒரு பயங்கரவாதச் செயல் என்று பிலிப்பீன்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது.
“வெளிநாட்டு பயங்கரவாதிகளின் அறிவற்ற, கொடூரமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்,” என்று அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் கூறினார்.
“அப்பாவி மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் தீவிரவாதிகள் சமூகத்தின் எதிரிகள்,” என்றும் அவர் சொன்னார்.
மின்டானோ பல்கலைக்கழக குண்டுவெடிப்பு சம்பவத்தை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருவதாக வட்டார காவல்துறை இயக்குநர் பிரிகேடியர் ஜெனரல் ஆலன் நொபிளசா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களின் பழிவாங்கும் செயலாக இது இருக்கும் என்று நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2017ஆம் ஆண்டில் ஐந்து மாதங்கள் தீவிரவாதிகளால் முற்றுகையிடப்பட்ட நாட்டின் ஆகப்பெரிய முஸ்லிம் நகரமான மராவியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இதற்கு ஒரு நாள் முன்புதான் டிசம்பர் 1ஆம் தேதி அன்று இங்கிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் ராணுவ நடவடிக்கையில் 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்ட அதிபர் மார்கோஸ், பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி தேசிய காவல்துறைக்கும் ஆயுதப் படைக்கும் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.
“இந்த இரக்கமற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவோம்” என்று அவர் சூளுரைத்துள்ளர்.
ராணுவ மேஜர் ஜெனரல் கேப்ரியல் விரே, மின்டானோ மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலை ‘பயங்கரவாத செயல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மராவி நகர மேயர் மஜுல் காண்டம்ரா, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“நமது நகரம் நீண்ட காலமாக அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறது, அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்கும் இதுபோன்ற வன்முறைச் செயல்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று காண்டம்ரா தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“தற்போது முழு விழிப்புநிலையில் நாங்கள் இருக்கிறோம், எங்கள் படைகள் தயாராக இருக்கின்றன. குற்றவாளிகளின் அடையாளத்தைக் கண்டுபிடித்து அதன் பின்னணியில் இருப்பவர்களை வெளிக்கொண்டு வருவோம்,” என்று ஜெனரல் விரே தெரிவித்தார்.
மின்டானோ மாநில பல்கலைக்கழகம், சம்பவம் குறித்து வருத்தமும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளது.
“இந்த அர்த்தமற்ற, கொடூரமான செயலை நாங்கள் கண்டிக்கிறோம்,” என்று ஃபேஸ்புக் பதிவில் அது கூறியிருந்தது.
இதற்கிடையே பல்கலைக் கழக வகுப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. வளாகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
“எங்கள் கிறிஸ்தவ சமூகத்திற்கும் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்,” என்று பல்கலைக்கழகம் கூறியது.