பெய்ஜிங்: மியன்மாரில் இணைய மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 40,000க்கும் அதிகமானோர் சென்ற ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சீன அரசாங்க ஊடகம் வெள்ளிக்கிழமையன்று இத்தகவலைத் தெரிவித்தது.
மியன்மாரின் எல்லைப் பகுதிகளில் இணைய மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பொதுவாக சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அடிக்கடி மியன்மாருக்குக் கடத்திக் கொண்டுவரப்படுவோர் இணைய மோசடிச் செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இத்தகைய மோசடிகள் பெய்ஜிங்கை ஆத்திரப்படுத்தியுள்ளன. ஆண்டுதோறும் அவற்றில் பில்லியன்கணக்கான டாலர் சம்பந்தப்பட்டுள்ளதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இணைய மோசடிகளை முறியடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சீனா, மியன்மாரைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வந்துள்ளது. பெய்ஜிங், மியன்மாரின் ராணுவ அரசாங்கத்துக்கு முக்கியப் பங்காளி.
மியன்மாரில் மோசடிகள் நடத்தப்படும் இடங்களில் குறைந்தது 120,000 பேர் சிக்கியிருக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு சபை சென்ற ஆண்டு தெரிவித்தது.