ஷா ஆலம்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட காரில் பல மணிநேரம் தவறுதலாக விடப்பட்ட ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார்.
ஷா ஆலம் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட காரில் அச்சிறுமியை அவரது தாய் தவறுதலாக விட்டுச்சென்றார். சிறுமியின் தாய் அம்மருத்துவமனையின் ஊழியர்.
ஜனவரி 30ஆம் தேதியன்று பிற்பகல் இரண்டு மணியளவில் தாய், சிறுமியை மழலையர் பராமரிப்பு நிலையத்திலிருந்து காரில் அழைத்து வந்தார்.
சிறுமி காரின் பின்னிருக்கையில் உறங்கிக்கொண்டிருந்தார். அதை மறந்துபோன தாய், காரின் இயந்திரத்தை அடைத்து நிறுத்திவிட்டுச் சென்றதாக காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
மாலை சுமார் ஆறு மணிக்குக் கணவர் தொலைபேசியில் அழைத்தபோதுதான் அந்த 34 வயது தாய்க்குத் தனது மகள் காரில் இருப்பது நினைவுக்கு வந்தது.
நினைவிழந்த நிலையில் இருந்த சிறுமி, ஷா ஆலம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.