வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுத் தலைவர் மைக் மெக்கால், தைவானின் புதிய அதிபராகத் திரு லாய் சிங்-டே பதவியேற்கும் நிகழ்ச்சிக்குத் தாம் செல்லவிருப்பதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் தைவானுக்கு ஆதரவு தரும் சட்டம் இயற்றப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு கூறினார்.
ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாஷிங்டனுக்கான தைவானியப் பிரதிநிதி டா-ரே யுய் ஆகியோரும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
“புதிய அதிபரின் பதவியேற்பைக் கொண்டாடும் நிகழ்ச்சிக்குச் செல்லும் பேராளர் குழுவிற்கு நான் தலைமை தாங்கிச் செல்வேன்,” என்று திரு மெக்கால் கூறினார்.
சென்ற ஆண்டு (2023) ஏப்ரலில் அவர் தைவான் சென்று அதிபர் சாய் இங்-வென்னைச் சந்தித்ததை அடுத்து சினமுற்ற சீனா, ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. திரு மெக்கால் மீது தடைகளையும் விதித்தது.
மே 20ஆம் தேதி தைவானில் புதிய அதிபர் லாய் பொறுப்பேற்றுக்கொள்வார்.