பாரிஸ்: கொவிட்-19 கிருமிப் பரவலின் முதல் இரண்டு ஆண்டுகளில் உலகெங்கும் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 1.6 ஆண்டுகள் குறைந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மனிதர்களின் ஆயுட்காலம் பல்லாண்டாக அதிகரித்து வந்த போக்கை கொவிட்-19 திருப்பிப்போட்டது ஆய்வில் தெரியவந்தது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘ஐஎச்எம்இ’ ஆய்வுக்கழகம் மேற்கொண்ட நோயால் உலகளாவிய நிலையில் ஏற்பட்ட சுமை எனும் ஆய்வின் முடிவுகள் மார்ச் 12ஆம் தேதி வெளியிடப்பட்டன.
கடந்த 50 ஆண்டுகளில் போர், இயற்கைப் பேரிடர் போன்றவற்றைக் காட்டிலும், கொவிட்-19 நோய்த்தொற்று பெரியவர்களின் உடல்நிலையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஆய்வு குறிப்பிட்டது.
2020, 2021ஆம் ஆண்டுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் 84 விழுக்காட்டு இடங்களில் மனிதர்களின் வாழ்நாள் குறைந்தது தெரியவந்தது. புதிய கிருமிகளின் பேரழிவு ஏற்படுத்தும் தன்மையை இது காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அந்த ஈராண்டுகளில், 15க்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களில் 22 விழுக்காட்டினர் உயிரிழந்தனர். பெண்களில் இந்த விகிதம் 17 விழுக்காடு என்று ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
மெக்சிகோ சிட்டி, பெரு, பொலிவியா போன்றவற்றில் மனிதர்களின் ஆயுட்காலம் மிக அதிகமாகக் குறைந்தது.
நம்பிக்கையூட்டும் சில தகவல்களையும் அந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021ல், ஐந்து வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளின் மரண எண்ணிக்கை கிட்டத்தட்ட அரை மில்லியன் குறைவாகப் பதிவானது.
மேலும், கிருமிப்பரவலின்போது மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்தாலும் பொதுவாக அவர்கள் முன்பைவிடக் கூடுதல் நாள் உயிர்வாழ்கின்றனர்.
1950க்கும் 2021க்கும் இடையில், மனிதர்களின் ஆயுட்காலம் 23ஆண்டுகள் அதிகரித்ததாக ஆய்வாளர்கள் கூறினார்.
2020, 2021ஆம் ஆண்டுகளில் கொவிட்-19 கிருமிப் பரவலால் 15.9 மில்லியன் பேர் மாண்டனர்.