சிட்னி: ஆஸ்திரேலியா, பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்புக்கான (யுஎன்ஆர்டபிள்யூஏ) நிதியுதவியை மீண்டும் தொடங்கவிருக்கிறது.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், மார்ச் 15ஆம் தேதி அந்தத் தகவலை வெளியிட்டார்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலில் யுஎன்ஆர்டபிள்யூஏ ஊழியர்கள் சிலரும் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஆஸ்திரேலியா அந்த அமைப்புக்கான நிதியுதவியை நிறுத்திவைத்தது.
நிதியுதவியை மீண்டும் தொடங்குவது குறித்து அந்த அமைப்புடனும் நன்கொடை வழங்கும் மற்ற நாடுகளுடனும் பேச்சு நடத்தியதாகக் கூறிய திருவாட்டி வோங், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துத் திருப்தி அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள $6 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$5.3 மில்லியன்) நிதி உடனடியாக வழங்கப்படும் என்றார் அவர்.
குழந்தைகளும் குடும்பங்களும் பட்டினியால் வாடும் நிலையில் அனைத்துலகச் சமூகத்தினருடன் இணைந்து அவர்களுக்கான உதவிகளை விநியோகிப்பதற்கு யுஎன்ஆர்டபிள்யூஏ அமைப்பு முக்கியப் பங்கு வகிப்பதாக அமைச்சர் வோங் கூறினார்.
யுஎன்ஆர்டபிள்யூஏ அமைப்பின் ஊழியர்கள் 12 பேர் அக்டோபர் 7 தாக்குதலில் ஈடுபட்டதாக இஸ்ரேல் கூறியதை அடுத்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட நாடுகள் கடந்த ஜனவரி மாதம் அந்த அமைப்புக்கான நிதியுதவியை நிறுத்தின.
யுஎன்ஆர்டபிள்யூஏ அமைப்பு சிலரைப் பணி நீக்கம் செய்ததை அடுத்து சுவீடன், கனடா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை நிதியுதவியை மீண்டும் தொடங்கின.