அமெரிக்க-சீன அதிபர்களுக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் இரு வல்லரசுகளுக்கு இடையிலான உறவின் முதிர்ச்சியை உணர்த்துவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் அமெரிக்கத் தலைமை செய்தியாளர் பாக்யஸ்ரீ கரேக்கர் தெரிவித்து உள்ளார்.
அதிபர் ஜோ பைடனுக்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை நேர்மையானது என்றும் ஆக்ககரமானது என்றும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டு உள்ளது.
சீனா ஒருபடி மேலே சென்று, அமெரிக்காவுடனான உறவுகள் நிலைப்படத் தொடங்கி இருப்பதாகத் தெரிவித்து உள்ளது.
இரு தலைவர்களும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) தொலைபேசி வழியாக 105 நிமிடங்கள் உரையாடினர்.
“சட்டையின் முதல் பொத்தானை எப்போதும் சரியாக மாட்ட வேண்டும். அதைப்போல சீன-அமெரிக்க உறவுக்கு உத்திபூர்வ கண்ணோட்டமே எப்போதும் அடிப்படையானது என்று அதிபர் ஸி வலியுறுத்தினார்,” என்று சீன வெளியுறவு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
2023 நவம்பர் மாதம் நேரடியாகச் சந்தித்துக்கொண்ட பின்னர் இரு அதிபர்களுக்கும் இடையில் நடைபெற்று இருக்கும் முதல் தனிப்பட்ட தகவல் பரிமாற்றம் இது.
சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) உச்சநிலைக் கூட்டத்தில் அந்த நேரடிச் சந்திப்பு நிகழ்ந்தது.
பாதுகாப்பு, தொழில்நுட்பம், ஒத்துழைப்பு, போதைப் பொருள் ஒழிப்பு போன்றவற்றை உள்ளடக்கிய பேச்சுவார்த்தை நல்லமுறையில் நிகழ்ந்துள்ளதாக இருதரப்பும் தெரிவித்து உள்ளன.
சீனத் தரப்பு தெரிவிக்கையில், “சீன-அமெரிக்க உறவு நிலைப்படத் தொடங்கி உள்ளது. இதனை இரு சமூகங்களோடு அனைத்துலகச் சமூகமும் வரவேற்றுள்ளது,” என்றது.
அதேவேளை, உறவின் கசப்புத்தன்மையும் ஒருபக்கம் வளருவது இருதரப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் அது கூறியது.