இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளதாலும் அங்கு ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும் உலக நாடுகளில் சர்க்கரை விலை மேலும் உயரக்கூடும்.
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்குச் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. கடந்த 2013 மே மாதத்தை ஒப்புநோக்க, பதனிடப்படாத சர்க்கரையின் விலை இப்போது 65 விழுக்காடு அதிகமாக உள்ளது.
இப்போதைக்கு, அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான ஓராண்டு காலத்திற்கு 6.1 மில்லியன் டன் சர்க்கரையை மட்டும் ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே 5.7 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டது என்று அனைத்திந்திய சர்க்கரை வணிகச் சங்கம் தெரிவித்துள்ளது.
எஞ்சியுள்ள 0.4 மில்லியன் டன்னும் இம்மாதம் 25ஆம் தேதிக்குள் ஏற்றுமதி செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் இந்தியாவிலிருந்து அடுத்த ஆண்டுதான் சர்க்கரை ஏற்றுமதி தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த 2021-22 பருவத்தில் சாதனை அளவாக 11.2 மில்லியன் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்திருந்தது.
சென்ற 2022-23ஆம் ஆண்டில் அந்நாடு 38.5 மில்லியன் டன் சர்க்கரையை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது 36.8 மில்லியன் டன் என்ற அளவிற்கே இருந்தது என்று இந்தியச் சர்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) கடந்த மாதம் 26ஆம் தேதி தெரிவித்தது.
இந்தியாவின் உள்நாட்டுப் பயன்பாட்டிற்கே கிட்டத்தட்ட 27.5 மில்லியன் டன் சர்க்கரை தேவைப்படுகிறது. அங்கு எத்தனால் தயாரிப்பிற்கும் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது.
கரும்பு விளைச்சல் அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் காலநிலை சார்ந்த இடையூறுகளால் இம்முறை விளைச்சல் கிட்டத்தட்ட 15 விழுக்காடு குறைந்துவிட்டதாக இஸ்மா தலைவர் ஆதித்ய ஜுஞ்சுன்வாலா கூறினார்.
"மழைப்பொழிவு நன்றாக இருந்தாலும் அது பரவலாக இல்லை," என்றார் அவர்.
இந்தப் பருவத்தில் இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி 31.1 மில்லியன் டன்னாக உள்ளது என்றும் இது ஆண்டு அடிப்படையில் ஒப்புநோக்க 5.4 விழுக்காடு குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டது.