ஜார்ஜ்டவுன்: பினாங்கு மலைக்கான கம்பிவண்டித் திட்டம் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று ‘பினாங்கு ஹில் கார்பரேஷன்’ பொது மேலாளர் சியோக் லே லெங் தெரிவித்தார்.
திட்டத்துக்கான அடிக்கல் நடும் விழா அந்த மாதத்தில் நடைபெறும் என்றார் அவர்.
பிப்ரவரி 3ஆம் தேதி காலையில் மேம்படுத்தப்பட்ட பினாங்கு மலை நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
திட்டத்துக்குத் தேவையான ஒப்புதல்கள் அனைத்தையும் பெற்றுவிட்டதாக அவர் கூறினார்.
திட்டம் முடிவடையக் கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகும் என்றும் எளிதில் பாதிப்படையக்கூடிய மலைப் பகுதிகளைத் திட்டம் உள்ளடக்கி உள்ளதால் வானிலையைப் பொறுத்தும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் மூன்றாண்டுகளாக பினாங்கு மலை நிலையத்தில் நடந்த மேம்பாட்டுப் பணிகளுக்கு 10.9 மில்லியன் ரிங்கிட் (S$3,105,604) செலவானதாக அறியப்படுகிறது.
ஜனவரி மாதத்தில் பினாங்கு மலைக்கு 94,927 பேர் வருகை அளித்திருந்தனர்.