கடற்படைப் போர்த்திற உத்திகளை வகுக்கும் பிரிவில் நிபுணராகப் பணியாற்றும் 26 வயது ஜீவனேஸ்வரன் முரளிதரன், அண்மையில் மூத்த ராணுவ வல்லுநராக நியமிக்கப்பட்டார்.
தனது பொறியியல் திறனைக் கொண்டு சிங்கப்பூர் கடற்படையின் வளங்களையும் அமைப்பு முறையையும் போர்காலத்திற்குத் தயார்
நிலையில் இருப்பதை 4ஆம் ராணுவ வல்லுநர் (ME4A) ஜீவனேஸ்வரன் உறுதிப்படுத்துவார் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். 18வது முறையாக நடந்தேறிய மூத்த ராணுவ வல்லுநர் நியமன நிகழ்ச்சியில் பங்குபெற்ற 91 ராணுவ வல்லுநர்களில் ஜீவனேஸ்வரனும் ஒருவர்.
ராணுவத்துறை வல்லுநர்கள் திட்டத்தின் (Military Domain Experts Course) நிறைவை முன்னிட்டும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.
பொறியியல், நுண்ணறிவு, ராணுவ மருத்துவம், இணையப் பாதுகாப்பு ஆகிய அம்சங்களில் ராணுவ வல்லுநர்களுக்கு நிபுணத்துவம் பெற இத்திட்டம் வழிவகுத்தது.
கடந்த மாதம் 15ஆம் தேதியன்று நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ், சிங்கப்பூரின் தற்காப்பு சாதனங்கள் தயார்நிலையில் இருப்பதற்கும் போரில் சண்டை
யிடும் திறன் வலுவாக இருப்பதற்கும் ராணுவ வல்லுநர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
நன்யாங் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் பட்டம் பெற்ற ஜீவனேஸ்வரன், தமக்குப் படிக்கும் காலத்திலேயே கடல் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தினால் இத்துறையைத் தேர்வு செய்ததாகக் கூறினார்.
“கடல் துறை உட்பட தலைமைத்துவ பொறுப்பிலும் இருக்க எப்போதும் விருப்பம் இருந்ததுண்டு. சிங்கப்பூரின் கடல்
துறை, நம் நாட்டின் பொருளியலுக்கு முக்கியப் பங்களிக்கிறது.
“தலைமைப் பொறியாளராக என் கடமையை முறையாக ஆற்றி, சிங்கப்பூரின் மேம்பாட்டிற்கு எனது பங்கை வழங்க முனைகிறேன்,” என்றார் ஜீவனேஸ்வரன்.
சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் தலைவர் ரியர் அட்மிரல் லியு சுவென் ஹோங்கிடமிருந்து சடங்குபூர்வ வாள் பெற்று மூத்த ராணுவ வல்லுநராக நியமிக்கப்பட்டார் ஜீவனேஸ்வரன் முரளிதரன். படம்: தற்காப்பு அமைச்சு