தேசிய சேவை தொடங்கியதற்கு முன் 2.4 கிலோமீட்டர் ஓட்டத்தை நிறைவு செய்ய 20 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டார் இரண்டாவது லெப்டினண்ட் குகனவேல் அசோக்குமார் (படம்). தற்போது 20 வயதான இவர், சிங்கப்பூர் ஆகாயப் படை அதிகாரியாக உயர்ந்திருக்கிறார்.
தேசிய சேவையில் சேர்வதற்கு முன்னர் குகன் தம் உடற்திறனில் அதிக நாட்டம் காட்டவில்லை. பள்ளிகளில் நடத்தப்படும் நாப்ஃபா சோதனையில் தோல்வி அடைந்ததால் அடிப்படை ராணுவ பயிற்சியை 17 வாரங்களுக்கு மேற்கொள்ளவேண்டி இருந்தது. இருந்தபோதும் இந்தப் பயிற்சியின் முடிவுக்குள் அவர், ஐபிபிடி உடற்திறன் சோதனையில் வெற்றியடைந்தார்.
ஐபிபிடியில் சிறப்பாக செய்ததால் தேசிய சேவையில் அதிகாரி உள்ளிட்ட பல சிறப்பான பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என தமக்குப் பயிற்சி அளித்த சார்ஜெண்ட் ஆலோசனை கூறியதாக குகன் தெரிவிக்கிறார்.
ஐபிபிடியில் வெள்ளி விருதினைப் பெற்றார் குகன். ஓசிஎஸ் எனப்படும் ராணுவ அதிகாரி பயிற்சிப் பள்ளியில் அவர் சேர்ந்தார். ராணுவத்தில் எம்இ3 பொறியியல் அதிகாரியாக இருக்கும் தமது தந்தை அளித்த ஊக்கம், ராணுவ முகாமில் கிடைத்த நல்ல நட்பு ஆகியவை குகனுக்கு வெற்றியைத் தந்தது.
இப்போது குகனால் அடிக்கடி பத்து கிலோமீட்டர் தூரம் ஓட முடிகிறது. “இந்த முன்னேற்றத்தைப் படிப்படியாகத்தான் அடைய வேண்டும். என்னால் முடிந்தவரை செய்த பிறகு அதையும் மீறி செய்ய முயல்வேன். எல்லைகளைத் தொடர்ந்து தகர்த்தெறியும்போது முன்னேற்றம் தொடர்ச்சியாக இருக்கும்,” என்றார் குகன்.