கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக செயின்ட் ஆண்ட்ருஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்று சாதாரண நிலைத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற ராஜேந்திரன் ராஜேஷ், விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் சேர்ந்தார்.
ஆனால், மேல்நிலைத் தேர்வில் இவர் சிறப்பாகச் செய்யாததால் தேசிய சேவையில் சேர்ந்தபோது அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற குழப்பம் இவருக்கு ஏற்பட்டது.
அந்தக் குழப்பத்திற்கான பதிலும் தேசிய சேவையின்போதுதான் இவருக்கு கிடைத்தது.
“உயிர் அறிவியல் மீதான ஆர்வம் அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது. ஆசிரியராக வேண்டும் என்று தொடக்கத்தில் ஆசைப்பட்டேன். ஆனால் ராணுவத்தில் இருந்தபோது தாதிமைத் துறை மீது நாட்டம் அதிகரித்ததால், பிடித்த துறையிலேயே வாழ்க்கைத் தொழிலைத் தொடங்க முடிவு செய்தேன்,” என்று ராஜேந்திரன், 21, நினைவுகூர்ந்தார்.
தற்போது நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாதிமைத் துறையில் முதலாம் ஆண்டு பட்டயக் கல்வியை மேற்கொண்டு வருகிறார் ராஜேந்திரன். இத்துறை மீது இவர் கொண்டிருக்கும் ஆர்வம், இவர் பெற்றிருக்கும் மதிப்பெண்களிலும் பிரதிபலிக்கிறது. இதுவரை இவர் பெற்றிருக்கும் ஜிபிஏ புள்ளிகள் 3.96.
தொடக்கக் கல்லூரியில் மேல்நிலைத் தேர்வு எழுதிய பிறகு பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்குப் பதிலாக பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்ந்திருப்பது ராஜேந்திரனுக்கு தொடக்கத்தில் கவலையைத் தந்தாலும் அதனால் இவர் துவண்டுவிடவில்லை.
“தேசிய சேவையை முடிக்கவே ஈராண்டுகள் ஆகிவிடுகின்றன. அதன் பிறகு கல்விப் பாதையை மாற்றுவதால் படிப்பை முடிப்பது தாமதமாகும் என்பதை நான் அறிந்தேன்.
“இந்த முடிவு எனக்கு சோர்வையும் அழுத்தத்தையும் தந்தது. ஆனால் விரும்பாத ஒரு துறையில் சேர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்ல தடுமாறுவதைவிட பிடித்த துறையில் படித்து கல்வியை முடிக்க தாமதம் ஏற்பட்டாலும் விட்டதைப் பின்னர் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது,” என்றார் ராஜேந்திரன்.
பல சோதனைகளையும் தாண்டி தாம் எடுத்த முடிவில் திடமாக இருக்க, இவருக்கு மனஉறுதி தேவைப்பட்டது. காரணம், பலதுறைத் தொழிற்கல்லூரி பாதையைத் தேர்ந்தெடுக்க இவர் எடுத்த முடிவைப் பலரும் குறைகூறினர். ஆனால் அவர்களது வார்த்தைகளை இவர் ஒரு பொருட்டாகக் கருதவில்லை.
“இது என் வாழ்க்கை. இதைத் தீர்மானிக்கும் உரிமை எனக்குத்தான் உள்ளது. அதே நேரத்தில் நான் அவசரப்படவில்லை. நன்கு ஆராய்ந்த பிறகே இந்த முடிவை எடுத்தேன்,” என்று ராஜேந்திரன் கூறினார்.
ராணுவத்தில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றியபோது இவருக்கு மேலதிகாரியாக இருந்த மருத்துவர், தாதிமைத் துறையில் இவரால் சிறப்பாகச் செய்ய முடியும் என்று ஊக்கம் அளித்ததை ராஜேந்திரன் நினைவுகூர்ந்தார்.
அந்த மருத்துவரின் வார்த்தைகள் ராஜேந்திரனுக்கு திருப்புமுனையாக அமைந்தன.
“சிங்ஹெல்த் குழுமத்தின் பொது வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்று தாதிமைத் துறையைப் பற்றி நான் மேலும் அறிந்துகொண்டேன்,” என்று கூறினார்.
ஒரு துறையைத் தேர்ந்தெடுக்கும்போது, வேலை செய்யும் காலம் முழுவதும் அந்தத் துறையில் தம்மால் செழித்தோங்க முடியுமா என்று தீவிரமாக யோசிக்க வேண்டும் என்று இவர் அறிவுறுத்துகிறார்.