இணைய ஊடுருவிகள் விளைவிக்கும் பெரும் மிரட்டலை எதிர்கொள்ள அதிநவீன மென்பொருள் ஒன்றை விவேக் ராமச்சந்திரன் உருவாக்கி, அதை ஒரு வர்த்தகமாகச் செயல்படுத்தியும் வருகிறார். இணையப் பாதுகாப்பு நிபுணர்களை வளர்க்கிறார், அதுபற்றிய கேலிச்சித்திரங்களை இளையருக்காக தயாரிக்கிறார்.
தமது துறையின் உச்சாணிக் கொம்பை எட்டிப் பிடித்துள்ளபோதிலும் விவேக், 42, கனிவாகப் பேசுபவர், எளிமையாக நடந்துகொள்பவர். எங்களுடன் தமிழில் உரையாடும் வாய்ப்பு கிட்டிய மகிழ்ச்சி அவரிடம் தென்பட்டது. ‘நான் தமிழைச் சரியாகப் பேசுகிறேனா?’ என்று எங்களிடம் அவர் கேட்டபோது அவரது தன்னடக்கம் புலப்பட்டது.
சென்னையில் பிறந்து பின்னர் கோல்கத்தாவுக்குக் குடும்பமாக குடிபெயர்ந்தவர் விவேக்.
கணினித்துறை மீதான ஆர்வத்தைத் தம்மிடத்தில் விதைத்தது தம் பெற்றோர் என்றார் விவேக். 1990களில் விவேக்கின் பயன்பாட்டிற்காக கணினியை வாங்க அவரின் பெற்றோர் எடுத்த முடிவால் தம்முடன் பொறியியல் படித்தவர்களைக் காட்டிலும் விவேக்கின் கணினித் திறமை அதிகமாக இருந்தது.
கல்லூரி நாள்களின்போது நண்பர்களுடன் போட்டிபோட்டு ஊடுருவும் திறனை வளர்த்துக்கொண்டார். ஊடுருவல் சம்பவங்களைப் பற்றிய செய்திகளையும் வாசிப்பார். நிரலிடுதலில் உள்ள அறிவியல், கலைக்கூறுகளின் மீதான நாட்டம் நாளடைவில் அவரிடம் பெருகியது.
திரைகடலோடித் திறன்தேடுதல்
2000களில் கூகல், யாஹூ போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊடுருவலுக்கு ஆளான சம்பவங்களால் இத்துறை மீதான இவரது ஆர்வம் மேலும் வளர்ந்தது. இதன் தொடர்பான வேலைப் பயிற்சி ஒன்றை 2003ல் சுவிட்சர்லாந்தில் விவேக் மேற்கொண்டார். ஆனால் இணையப் பாதுகாப்புக்கான வேலைச் சந்தை அப்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் இல்லாததால் அமெரிக்காவில் வேலைபார்க்க முடிவு செய்தார்.
இணையப் பாதுகாப்புத் துறை அடுத்த பத்து ஆண்டுகளில் பெரிய துறையாக உருவெடுக்கும் என்பதைத் தம் பெற்றோருக்குப் புரிய வைத்தார் விவேக்.
அமெரிக்காவில் இணையப் பாதுகாப்பு தொடர்பான புது நிறுவனங்களில் பணியாற்றிய விவேக், சில ஆண்டுகளிலேயே வகுப்புகளை நடத்தினார். வேலை செய்வதிலும் கற்பிப்பதிலும் அதிக சுதந்திரம் விரும்பி தாமே ‘பென்டெஸ்டர்’ கல்வி நிலையத்தை ஆரம்பித்தார்.
“தகவல் தொழில்நுட்பத் துறையில் ஓர் இந்தியர் கற்பிப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது,” என்றார் அவர்.
2019ல் ‘பென்டெஸ்டர்’ கல்வி நிலையத்தை சிங்கப்பூருக்கு இடம் மாற்றினார் விவேக். இணையப் பாதுகாப்புத் துறையின் அடுத்தகட்ட தேவைகளைக் கருதி ‘ஸ்குவேர் எக்ஸ்’ நிறுவனத்தை ஆரம்பித்தார்.
மாறுபட்ட அணுகுமுறை
‘ஸ்குவேர் எக்ஸ்’ மென்பொருள் வழியாக தீங்கு விளைவிக்கும் மென்பொருள் கொண்ட மின்கோப்பு திறக்கப்பட்டால் கணினியைத் தாக்கவிடாது கணினிக்கு வெளியே இயங்கும் ‘கிளவுட்’ தளத்தில் கட்டுப்படுத்தப்படும்.
இந்த அணுகுமுறையை வேறு எந்த நிறுவனமும் கையாண்டதில்லை என்று இவர் கூறுகிறார். தனிப்பட்ட பயனீட்டாளர்களின் தேவைக்கு இணையப் பாதுகாப்பு மென்பொருள்கள் குறைவாக இருப்பது குறித்த நீண்டநாள் யோசனைக்குப் பிறகு இந்த மென்பொருளை உருவாக்கும் யோசனை உதயமானதாக அவர் கூறினார்.
“ஸ்குவேர் எக்ஸ் மென்பொருள் முழுக்க முழுக்க ஒரு சிங்கப்பூர் படைப்பு. நானும் என் குழுவினரும் சிங்கப்பூரில் இருந்தபடியே இந்தப் பணித்திட்டத்திற்கான முன் ஆய்வுகளைச் செய்து உருவாக்கினோம்,“ என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.
வரைகலை ஆர்வம்
தம் துறையைப் பற்றிய புரிதல் பொதுமக்களுக்குத் தேவைப்படுவதாகக் கூறிய திரு விவேக், இது தம் சொந்தப் பிள்ளைகளுக்கும் பொருந்தும் என்றார்.
தாம் ஓர் ஊடுருவி எனத் தம் மகன் தவறாக எண்ணியதை நகைத்தபடி நினைவுகூர்ந்த விவேக், தமது தொழில் எத்தகையது என்பதை எடுத்துரைக்க இறுதியில் கேலிச்சித்திரங்களைப் பயன்படுத்த முடிவுசெய்தார்.
‘ஊடுருவிகள் - மின்னிலக்க யுகத்திற்கான அதிநாயகர்கள்’ (Hackers - Superheroes of the Digital Age) என்ற தலைப்பிலான திரு விவேக்கின் கேலிச்சித்திரப் புத்தகம், ராமா என்ற நிரல் நிபுணர் இணையக் குற்றங்களைத் தடுப்பதாகச் சித்திரிக்கிறது.
தீர்வு காணும் திறன் குறித்து, “உங்களைச் சுற்றியுள்ள நடப்புகளையும் பிரச்சினைகளையும் கவனியுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த துறையின்வழி அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமா என எண்ணிப் பாருங்கள். சிறிய பிரச்சினைகளைக் களையக் களையப் பெரும் தீர்வுகளுக்கான திறனை வளர்த்துக்கொள்ள முடியும்,” என்றார் விவேக்.