கிருத்திகா சுரேஷ்
பரதநாட்டியத்தைப் பற்றி அறிந்திராதோர் மத்தியில் நடனமாடிப் பாராட்டும் பெற்ற தருணத்தை என்னால் மறக்க முடியாது.
பரபரப்புமிக்க விரிவுரைகளுக்கு இடையே நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவியான நான், அண்மையில் மனநிறைவான ஒரு பயணத்தை மேற்கொண்டேன்.
என் நடனப் பள்ளி நண்பர்களுடன் நான் புதுடெல்லி, லக்னோ, அயோத்தி, வாரணாசி ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தேன்.
துடிப்புமிக்க பெருநகரான புதுடெல்லியிலிருந்து தொடங்கியது எங்கள் பயணம்.
இந்தியாவின் நுழைவாயில், குதுப் மினார் உள்ளிட்ட பல இடங்களைச் சுற்றிப்பார்த்தோம்.
புராணா கிலா கோட்டையில் நடைபெற்ற ராமாயண விழாவில் பிறநாடுகளைச் சேர்ந்த நடனமணிகளுடன் ஆடினோம்.
விழாவில் கலந்துகொண்டபோது கலையின் பன்முகத்தன்மையை நான் உணர்ந்தேன். நுணுக்கமாக, தாள லய செறிவுமிக்க செம்மைப்படுத்தப்பட்ட கலைவடிவங்கள் புத்துயிர் பெற்றது போலவும் உணர்ந்தேன்.
லக்னோவில் எங்களின் நடனம், பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. அவர்களில் பலர் இதுவரை பரதநாட்டியத்தைக் கண்டிராதபோதும் அவர்கள் ரசித்துப் பார்த்ததை எங்களால் உணர முடிந்தது. இதே அனுபவம் அயோத்தியிலும் கிடைத்தது.
வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்ற இயன்றது பயணத்தின் முத்தாய்ப்பாக அமைந்தது.
அத்தலத்தில் நிலவிய இறையுணர்வுடன் புனிதப் பயணிகள் காட்டிய பவ்வியம், ஒட்டுமொத்த சூழலை அழகாக்கியது எனலாம்.
அவ்விடத்தில் நாங்கள் ஆடிப்பாடி மெய்மறக்கும்படியான அனுபவத்தைப் பெற்றோம். கங்கா நதி அருகிலும் நாங்கள் நடனம் படைத்தோம்.
குளிரான பருவநிலையும் பயண இடர்பாடுகளும் சவால்மிக்கதாக இருந்தபோதும் மக்கள் காட்டிய அன்பு எங்களை நெகிழவைத்தது.
இதுபோன்ற கலைப்பயணங்களைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் என்னுள் எழுந்தது.