மலையாளத்தில் வெளிவந்த 'பிரேமம்' படம் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றவர் சாய் பல்லவி. அந்தப் படம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுதுதான் 'கரு' என்னும் தமிழ்ப் படத்தில் 4 வயது சிறுமிக்கு தாயாக நடிக்கிறார் சாய் பல்லவி. இந்தப் படத்தை இயக்குநர் விஜய் இயக்குகிறார். ஒப்பனையே இல்லாமல் இயல்பாக பரு முகத்துடன் அறிமுகமான கோவைப் பெண்ணை தென் இந்திய நடிகர்கள் தேடினார்கள். ஆனால் யாருக்கும் சிக்காத சாய் பல்லவி இயக்குநர் விஜய்யின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அம்மா மகள் இடையே இருக்கும் பாசப் பிணைப்புகள்தான் இந்தப் படத்தின் மையக் கதை. படப்பிடிப்பு முடிந்து தற்பொழுது குரல் பதிவு நடந்துகொண்டு இருக்கிறது. அண்மையில் சாய் பல்லவி தெலுங்கில் அறிமுகமான 'பிடா' படமும் பெரிய அளவில் வெற்றி பெற்று அங்கும் அவருக்கு பெருமளவில் ரசிகர்கள் சேர்ந்துள்ளனர்.
தெலுங்கில் தற்போது நானி ஜோடியாக 'எம்சிஎ' படத்தில் சாய் பல்லவி நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கு பத்திரிகையாளர் ஒருவர் அண்மையில் சாய் பல்லவியை மலையாளப் பெண் எனக் குறிப்பிட்டபோது சாய் பல்லவி "நான் மலையாளப் பெண் அல்ல. நான் ஒரு தமிழச்சி," என அவருக்கு கோபமாகப் பதிலளித்திருக்கிறார். மலையாளப் பெண் எனக் குறிப்பிட்டதற்கு சாய் பல்லவி ஏன் அவ்வளவு கோபப்பட்டார் என்பதுதான் தெலுங்கு பத்திரிகையாளர்களிடம் தற்போது பேச்சாக உள்ளதாம். கோத்தகிரியைச் சொந்த ஊராகக்கொண்டு, கோயம்புத்தூரில் படித்து வளர்ந்த சாய் பல்லவியை அப்படிச் சொன்னால் ஏன் கோபப்படமாட்டார்.