வாஷிங்டன்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் மேலும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25% வரை வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கெனவே சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா 20% வரி விதித்துள்ளது. இந்நிலையில் கூடுதல் வரி விதிக்கவிருப்பதாக திரு டிரம்ப் அறிவித்துள்ளார்.
புதிய வரி விதிப்பு நடப்புக்கு வந்தால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் பூசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு சீனாவி லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிட்டத்தட்ட 40 விழுக்காடு பொருட்களுக்கு வரி விதிப்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் தீர்மானிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. புதிய வரி விதிப்பால் சீனாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப் படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் சீனப் பொருட்களுக்கு திரு டிரம்ப் மேலும் வரி விதித்தால் அதற்கு பதில் நடவடிக்கையாக 200 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கவிருப்பதாக சீனா அறிவித்துள்ளது. ஏற்கெனவே சீனாவும் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதித்துள்ளது.