கோலாலம்பூர்: மலேசியாவில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவு உட்பட எட்டு சட்டங்களின் கீழ் 33 குற்றங்களுக்கு விதிக்கப்பட்டுவந்த மரண தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவை ஒருமனதாக தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதமர் அலுவலகத் துறை அமைச்சர் லியூ வுய் கியோங் கூறியுள்ளார். குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவு கொலைக் குற்றத்திற்காக உள்ள சட்டப் பிரிவாகும்.
ஒருமனதாக எட்டப்பட்டுள்ள இந்தக் கூட்டு தீர்மானத்தில் துப்பாக்கிகள் (கடும் தண்டனை) சட்டம், 1971; துப்பாக்கிகள் சட்டம், 1960; ஆட்கடத்தல் சட்டம், 1961; ஆயுதப் படைகள் சட்டம், 1972 ஆகிய சட்டப் பிரிவுகளும் உள்ளடங்கும். தண்ணீர் சேவைகள் தொழில் துறைச் சட்டம், 2006; உத்திபூர்வ வர்த்தகச் சட்டம், 2010; அபாய கரமான போதைப்பொருட்கள் சட்டம், 1952 ஆகியவற்றின் கீழ் விதிக்கப்படும் மரண தண்டனையையும் ரத்து செய்ய அத்தீர்மானம் வகை செய்கிறது. அமைச்சரவை ஒருமனதாக அத்தகைய தீர்மானத்தை எடுத்ததை அடுத்து அமைச் சரவை குறிப்பாணை ஒன்று சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அமைச்சுகளின் கருத்து களையும் பொதுமக்களின் கருத்துகளையும் அறிவதற்காக அந்தக் குறிப்பாணை அனுப் பப்பட்டதாக திரு லியூ நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி-பதில் அங்கத்தின்போது தெரிவித்தார். மரண தண்ட னையை ரத்து செய்வதன் தொடர் பில் அரசாங்கத்தின் நிலை குறித்து பக்கத்தான் ஹரப்பான் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யி லீ வுயென் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது திரு லியூ இதனைத் தெரிவித்தார். சுயேச்சை போலிஸ் புகார்கள் குறித்த மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று திரு லியூ கூறினார்.