இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் மனநிம்மதி இல்லாததாக, கலக்கமானதாக பலருக்கும் இருப்பதாக குறிப்பிட்ட 36 வயது பொறியியலாளரான நிசாம் ஏ ஹாஜாவுக்கு, எப்போதும் முழு நோன்பையும் பிடித்து முடித்து பின்னர் ஏற்படும் மகிழ்ச்சி ஏனோ இந்த முறை உண்டாகவில்லை. அம்மாவின் சிறப்பு நோன்புப் பெருநாள் காலை சமையலை மனைவி, மகன், உறவினர்கள் என எல்லாருடனும் ஒன்றுசேர்ந்து உண்டு களித்தபோதும் நிம்மதி இல்லாமல் இருந்ததாகக் கூறிய திரு நிசாமின் வருத்தத்திற்கும் கோபத்திற்கும் காரணம் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள், உயிர்ப்பலிகள். அதுவும் இஸ்லாத்தின் பெயரால் அவை நடத்தப்படுவது.
"ஐஎஸ்ஐஎஸ் போதனை மிகத் தவறானது. பலர் பாதிக்கப்படுகிறார்கள். உயிரிழக்கிறார்கள். இதைத் தடுக்க சிங்கப்பூரில் வாழும் நம்மால் நேரடியாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும் இஸ்லாம் போதிக்கும் நல்ல விஷயங்களை முடிந்தவரை பரப்ப வேண்டும். மற்றவர்களின் சுமை களைக் குறைக்க உதவவேண்டும். உதவி தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும்," என்பது அவரது நோக்கம். இதே கருத்தைப் பகிர்ந்துகொண்ட தனியார் பல்கலைக்கழக மாணவரான முகமட் பஷீர், 25, "உலக மக்களுக்கு அமைதியையும் நிம்மதியையும் கொடு என்பதே எல்லாரது பெருநாள் வேண்டுதலாக இருந்தது. எப்போதும் இந்தப் பிரார்த்தனை இருக்கும். இந்த ஆண்டு இது அதிகமாக இருந்தது," என்றார்.
இந்த முறை பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைக்குப் பின்னர் இடம்பெற்ற சமய போதனையில் தாக்குதல்கள் பற்றியும் இந்த நேரத்தில் மக்கள் அதிகம் கடைப்பிடிக்க வேண்டிய சமய நல்லிணக்கம், ஒற்றுமை குறித்துமே பேசப்பட்டது என்றார் 38 வயது திரு முகம்மது சுலைமான். "எந்த உயிரையும் எடுக்க எவருக்கும் உரிமை இல்லை என இஸ்லாம் கூறுகிறது. ஆனால் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது நம்பிக்கைகள் சிதைந்து, பயம் ஏற்படுகிறது," என்ற அவர், இந்நேரத்தில் சிங்கப்பூரராக இருப்பதை எண்ணிப் பெருமைப்படுவதாகக் குறிப் பிட்டார்.
பிடோக்கில் உள்ள அல்டக்கா பள்ளிவாசலின் வெளியே திரண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு வாழ்த்துக் கூறும் மனித வள அமைச்சர் லிம் சுவீ சே. ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி, ஃபெங்ஷான் தனித்தொகுதி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடித்தளத் தலைவர்கள் நேற்று அங்கு முஸ்லிம்களுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடினர்.