சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்ட புருணை சுல்தான் ஹசனல் போல்கியா நேற்று சிங்கப்பூர் ஆயுதப் படையின் பாசிர் ரிஸ் முகாமுக்கு வருகைஅளித்தார். அவருடன் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங், ராணுவப் படை தலைவர் மெல்வின் ஓங் ஆகியோர் இருந்தனர். பாசிர் ரிஸ் முகாமில் இடம்பெற்ற சிங்கப்பூர் ஆயுதப் படைகளைச் சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்புப் படையின் பாவனை பயிற்சியையும் வான்குடை வீரர்களின் சாகசங்களையும் சுல்தான் போல்கியா பார்வையிட்டார். அத்துடன், பாவனை பயங்கரவாதிகள் இலக்கை நோக்கி தாக்குதல் நடத்தும் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டார். வான்குடை வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தையும் அவர் பார்வையிட்டார். நிகழ்ச்சியின் இறுதியில், சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் கௌரவ மேம்பட்ட ராணுவ வான்குடை சாகச இறக்கைச் சின்னம் சுல்தான் போல்கியாவுக்கு வழங்கி சிறப்பிக்கப் பட்டது.
பாசிர் ரிஸ் முகாமுக்கு நேற்று வருகையளித்த புருணை சுல்தான் ஹசனல் போல்கியா (முன்வரிசை, வலது), மரியாதை காவல் அணியைப் பார்வையிட்டார். அவருக்குப் பின்னால் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் ராணுவப் படை தலைவர் மெல்வின் ஓங்கும் வருகின்றனர். படம்: தற்காப்பு அமைச்சு