கொவிட்-19 நெருக்கடியைச் சமாளிப்பதும் அந்தக் கிருமித்தொற்றின் பின்விளைவுகளும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் போல் தெரிகிறது.
கொவிட்-19 பெருந்தொற்றுநோய் தொடக்கக் கட்டத்தில்தான் நாம் இன்னமும் இருக்கிறோம் என்று கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் திரு லீ சியன் லூங் தெரிவித்தார். பொதுத் தேர்தலை இப்போது நடத்துவது ஏன் என்பதையும் அவர் விளக்கினார்.
நீண்ட நெடும் போராட்டத்தை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம் என்றார் திரு லீ. அந்தப் போராட்டம், நம்மில் பலரும் ஆயுள் காலத்தில் பார்த்திராத வகையில் பல முனைகளிலும் நமக்கு வலியையும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
நாம் வேலை பார்க்கின்ற, வசிக்கின்ற, விளையாடுகின்ற, கலந்துறவாடுகின்ற வழிகளில் பல மாறுதல்களையும் ஏற்படுத்தும். இந்த நெருக்கடி முற்றிலும் புதிய ஒன்று.
சுகாதார நெருக்கடிதான் அதன் பெரும் தாக்கம். கொவிட்-19 தலைகாட்டி ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள்ளாகவே உலகம் முழுவதும் ஒன்பது மில்லியன் மக்களை அந்தக் கிருமி தொற்றிவிட்டது. இன்னமும் தொற்று கூடுகிறது. ஏறக்குறைய பாதி மில்லியன் பேர் மாண்டுவிட்டார்கள். மரணமும் கூடுகிறது. எந்தவொரு கண்டத்தையும் சொல்லப்போனால் எந்தவொரு நாட்டையும் கொவிட்-19 கிருமி விட்டுவைக்கவில்லை.
பொருளியல் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.
1930களில் ஏற்பட்ட படுமோசமான மந்தத்தைவிட இப்போது பொருளியல் மந்தம் அதிகமாக இருக்கக்கூடும் என்று அனைத்துலக பண நிதியம் கணித்துள்ளது. இந்த ஆண்டு உலகப் பொருளியல் 4.9 விழுக்காடு சுருங்கும் என்று அது இப்போது கூறி இருக்கிறது.
முன்னேறிய நாடுகளின் பொருளியல் 8 விழுக்காடு வரை வீழ்ச்சி காணும். ஆசியாவின் பொருளியல் வளர்ச்சி பூஜ்ஜியத்துக்குக் கீழே குறைந்துவிடும். சீனா நீங்கலாக, இந்த வட்டார நாடுகளின் பொருளியல் சுருங்கும் என்று தெரிகிறது. உலக வர்த்தகம் மூன்றில் ஒரு பங்கு சிதைந்துவிடும் என்று உலக வர்த்தக நிறுவனம் தெரிவிக்கிறது.
இவை எல்லாம் பல விளைவுகளை ஏற்படுத்தும். பல நாடுகளில் ஈரிலக்க வேலையில்லா விகிதம் நிலவும். வருமான ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும்.
குறைந்த வருமான ஊழியர்கள், குறிப்பாக சேவை தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் ஆட்குறைப்புக்கு ஆளாவர். மில்லியன் கணக்கான நிறுவனங்களும் தனிநபர்களும் நொடித்துப் போகும் நிலை ஏற்படும். வேறு வழியில்லாமல் நிறுவனங்களும் குடும்பங்களும் கடன் வாங்கும் என்பதால் கடன் அளவு அதிகரிக்கும். விமான நிறுவனங்கள், விருந்தோம்பல், பொழுதுபோக்குத் துறையின் ஒரு பகுதி உள்ளிட்ட பல தொழில்துறைகள் படுமோசமாகப் பாதிக்கப்படும். இவை எல்லாம் சேர்ந்து பொருளியலை மேலும் மந்தத்தில் ஆழ்த்திவிடும்.
இந்தக் கிருமி நெருக்கடி, பொருள், சேவை விநியோகச் சங்கிலித்தொடரை அறுத்துவிட்டுள்ளது. பல நாடுகளிலும் உள்ள ஆலைகள் நிலைக்குத்திப் போய்விட்டன. இதனால் பொருட்கள் கிடைப்பது தடைப்பட்டு உள்ளது. விநியோகச் சங்கிலிகளும் இடம் மாறுகின்றன.
குறிப்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட பதற்றங்கள் காரணமாக இந்த நடைமுறை வேகம் அடைகிறது. இவற்றோடு வேலை இழப்புகளும் தன்னைப்பேணித்தன உணர்வும் கூடுகின்றன. இப்படிப்பட்ட பொருளியல் பாதிப்புகளுக்குச் செவி சாய்க்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் போர்க்கால நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன.
அசாதாரணமான நாணய மற்றும் நிதி திட்டங்களை அவை நடப்புக்குக் கொண்டு வருகின்றன. சிங்கப்பூரில் நான்கு வரவுசெலவுத் திட்டங்கள் மூலம் ஏறக்குறைய $93 பில்லியன் வெள்ளியை கடந்த நான்கு மாதங்களுக்கு உள்ளாகவே பொருளியல் ஊக்குவிப்பாக அரசாங்கம் அறிவித்து உள்ளது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதுவரை இல்லாத அளவுக்கு 15.4 விழுக்காடு நிதிப் பற்றாக்குறை ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
இருந்தாலும் கொவிட்-19 ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளில் சிலவற்றைக் குறைப் பதில் இந்த நடவடிக்கைகள் தலைசிறந்த வாய்ப்பாக இருக்கக்கூடும்.
இவை எல்லாம், வளர்ச்சியைக் கட்டிகாத்துவிடவோ ஒவ்வொரு வேலையையும் பாதுகாத்துவிடவோ முடியாது. உலக வர்த்தகம் சரியில்லை என்றால், விநியோகச் சங்கிலி அறுபட்டால் சிறிய, ஏற்றுமதி சார்ந்த நாடான சிங்கப்பூர் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகிவிடும்.
வளர்ச்சிக்கு தன்னுடைய உள்நாட்டுச் சந்தையைச் சார்ந்து இருக்கும் வாய்ப்பும் சிங்கப்பூருக்கு இல்லை.
சிங்கப்பூர் அமைந்திருக்கும் தென்கிழக்காசியாவும் இதே அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சிங்கப்பூருக்கு பக்கத்தில் உள்ள நாடுகளும் ஏற்றுமதி சார்ந்தவை என்பதால் உலக வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை பாதிப்புகள் காரணமாக அந்த நாடுகளும் எளிதில் பாதிக்கப்படும்.
இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய ஆசியானின் ஐந்து பெரும் நாடுகளின் பொருளியலும் இந்த ஆண்டு 2 விழுக்காடு சுருங்கும் என்று அனைத்துலக பண நிதியம் முன்னுரைத்துள்ளது.
பாதிப்பு இருக்கும் என்றாலும் ஆசியானில் உள்ள ஆசிய நாடுகளும் சீனா, தைவான், தென்கொரியா, ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் ஓரளவிற்கு கொவிட்-19 நெருக்கடியைச் சமாளித்து இருக்கின்றன. இவை தன்னைப்பேணித்தனத்துக்கு இன்னமும் மாறி விடவில்லை.
கொவிட்-19 நெருக்கடி இதர நெருக்கடியில் இருந்து வேறுபட்டு இருக்கிறது. உலகம் முன்பு எத்தனையோ நெருக்கடிகளைச் சந்தித்து இருக்கிறது. அவற்றில் இருந்து மீண்டு வந்ததைப் போலவே கொவிட்-19 நெருக்கடியையும் சமாளித்து உலகம் பழையபடி மீண்டு வராது என்பது நிச்சயம்.
புதிய பயனீட்டாளர், பழக்க வழக்கங்கள், வேலை பாணிகள் உருவெடுக்கின்றன. பல தொழில்துறைகள் பெரும் மாற்றம் காணும். தொழிற்சாலைகள் சமூக இடைவெளி நியதியைக் கைக்கொள்கின்றன.
தயாரிப்பு நடவடிக்கைகள் தானியக்கமயமாகும். மனித இயந்திரமயமாகும். சேவைத் துறையில் சில்லறை, கல்வி, வணிகம், நிதிச் சேவை போன்றவையும் பொழுதுபோக்குத் துறையும்கூட பெரிதும் மின்னிலக்கமயமாகும்.
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஏற்பாட்டில் சில நிரந்தரமாகும். அனைத்துலக ரீதியில் நிறுவனங்கள் செயல்படும் பாணியில் இந்த ஏற்பாடு விளைவை ஏற்படுத்தும்.
நிறுவனங்கள் ஊழியர்களைச் சேர்க்கும் முறைகளும் வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றும் பாணிகளும் மாறும். வர்த்தக, நிலச் சொத்து, வழிநில்லா போக்குவரத்துத் துறைகளும் பாதிக்கப்படும். நிறுவனங்கள் பொருளியல் மெதுவடைவதைச் சமாளிக்கும் வகையில் ஊழியர்களைக் குறைக்கும். மேலும் பல ஊழியர்கள் சுயமாக வேலைவாய்ப்பை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
சுற்றுலா, விமானப் போக்குவரத்து, கட்டுமானத் துறை, சில்லறை வர்த்தகம் போன்ற சில தொழில்துறைகளில் வேலை இழப்புகள் பரவலாக, அதிகமாக, நெடுங்காலத்திற்கு இருக்கும். சிலவற்றில் நிரந்தரமாகவும் இருக்கக்கூடும்.
பல ஊழியர்கள் வாழ்க்கைத்தொழில் மாற்றங்களைச் செய்ய வேண்டி இருக்கும். இவை காரணமாக கொள்கைகளை உருவாக்குபவர்களுக்கும் சவால்கள் ஏற்படும்.
நல்ல வேலையாக சிங்கப்பூரில் வளர்கின்ற அல்லது வளர்வதற்கு வாய்ப்புள்ள தொழில்துறைகளும் நிறுவனங்களும் இருக்கின்றன. சுகாதாரப் பராமரிப்பு, இதர சமூகச் சேவைகள், மருந்துத் தயாரிப்பு, நிதி, பலதரப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சேவைத் துறைகள் இவற்றில் அடங்கும்.
இருந்தாலும் அரசாங்கம் இலக்கு நிர்ணயித்து இருக்கும் 100,000 புதிய வேலைகளை உருவாக்குவது என்பது பெரும் சவாலாகவே இருக்கும்.
தொடக்கத்தின் முதல் கட்டத்தில்தான் நாம் இன்னமும் இருக்கிறோம் என்றால் நாம் இன்னமும் நீண்ட நெடுந்தொலைவு செல்ல வேண்டும்.
கொவிட்-19 பிரச்சினையை மட்டுமல்ல, அதற்குப் பிறகு வரும் மாற்றங்களையும் நாம் சமாளிக்க வேண்டும். அந்த மாற்றங்கள் எல்லாம் வேறுபட்ட பாணியிலான நெருக்கடிகளாக இருக்கும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் மிக முக்கியமான முடிவுகளைச் செய்ய வேண்டி இருக்கும். அந்த முடிவுகள், அடுத்த அரசாங்கத்தின் ஐந்து ஆண்டு பதவிக் காலத்திற்கு அப்பாலும், பல ஆண்டுகளில் உங்கள் வாழ்க்கையிலும் வாழ்வாதாரத்திலும் சிங்கப்பூருக்கு உரு கொடுப்பதிலும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதை திரு லீ செவ்வாய்க்கிழமை ஆற்றிய தேசிய உரையில் தெளிவுப்பட, பொருத்தமாகக் கூறி இருக்கிறார்.