சிங்கப்பூரில் தனிக்குடும்ப வாழ்வில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் பிள்ளைகளைப் பேணி கவனித்துக்கொள்ள, சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைக் கவனிக்க வெளிநாடுகளில் இருந்து பணிப்பெண்களை வேலை யில் அமர்த்த வேண்டிய கட்டாயத்தில் லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க, முதியோரைப் பராமரித்து பார்த்துக்கொள்ளவும் பணிப்பெண்கள் தேவைப்படுகிறார்கள். பணிப்பெண்கள் இல்லை என்றால் குடும்பம் நகராது, வீட்டில் எதுவுமே இயங்காது என்று சொல்லும் அளவுக்கு-அதாவது இந்தக் காலத்தில் மின்சாரம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்குப் பணிப்பெண்கள் இன்றியமையா நிலை அத்தகைய பல குடும்பங்களில் இருக்கிறது.
தெற்கு ஆசிய நாடுகளில் இருந்தும் ஆசியான் நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பெண்கள் இங்கு வந்து வீட்டு வேலை பார்க்கிறார்கள். சிங்கப்பூர் வாழ்வில் பணிப்பெண்கள் மிக முக்கியமான ஓர் அங்கமாகிவிட்ட நிலையில், அவர்களின் உரிமை களை நிலைநாட்டி, நல்வாழ்வைப் பாதுகாக்க மனித வள அமைச்சு ஏற்கெனவே பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.
சிங்கப்பூருக்கு முதல் முறை வரும் பெண்களுக்கு வேலை நியமனம் தொடர்பான நிபந்தனைகள், அவர்களுக்கு உள்ள உரிமைகள் போன்றவை எல்லாம் விளக்கப்படுகின்றன. சிங்கப்பூர் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்துகொள்ள பணிப்பெண்கள் தெரிந்துகொள்கிறார்கள்.
அதேபோல, முதன்முதலாக பணிப்பெண்ணை வேலைக்குச் சேர்க்கும் முதலாளிகளுக்கு உள்ள பொறுப்புகள் பற்றி அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பணிப்பெண்களுக்கு ஏதேனும் உதவி, ஆதரவு தேவையா என்பதெல்லாம் அவர்களைத் தொடர்புகொண்டு விசாரித்து தெரிந்துகொள்ளப்பட்டு ஏற்புடைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. காலக்கிரம முறைப்படி அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
என்றாலும் இவை எல்லாம் போதாது என்றே நினைக்கத்தோன்றும் அளவுக்கு அண்மைய காலத்தில் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இங்கு பணிப்பெண்கள் தவறாக நடத்தப்பட்டு நீதிமன்றங்களில் முதலாளிகள் தண்டிக்கப்படும் சம்பவங்கள் அதிகமாகிவிட்டன.
அதுவும் சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கு, ‘பயங்கரம்’ என்று நீதிபதி சுட்டிக்காட்டும் அளவுக்கு இருந்தது.
முதலாளியான ஒரு பெண்மணி, மியன்மார் நாட்டைச் சேர்ந்த பியாங் கெய் டோன் என்ற பணிப்பெண்ணைப் பல நாட்கள் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தினார், கடைசியில் பணிப்பெண் உயிரிழக்க நேரிட்டது.
முதலாளிகளின் கொடுமை காரணமாக பணிப்பெண்கள் மரணமடைந்த சம்பவங்கள் முன்பும் நிகழ்ந்துள்ளன. என்றாலும்கூட இந்த அண்மைய சம்பவம் பல கேள்விகளை எழுப்பிவிட்டுள்ளது.
பணிப்பெண்களின் பாதுகாப்பை இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்பதில் கவனம் செலுத்தவேண்டிய அவசியத்தை, கட்டாயத்தை அந்தச் சம்பவம் உருவாக்கியுள்ளது. பணிப்பெண்ணின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த நடப்பில் இருந்துவரும் விதிமுறைகள் கடைப்பிடிக்கப் படுவதில் குறைபாடுகள் உள்ளதோ என்ற சந்தேகத் தையும் அது கிளப்பிவிட்டுள்ளது.
மியன்மார் பணிப்பெண் விவகாரத்தைப் பார்க்கை யில், அந்தப் பெண் மரணமடைந்ததற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புகூட அவரைப் பரிசோதித்த ஒரு மருத்துவர் அதிகாரிகளிடம் எதையுமே தெரியப்படுத்தவில்லை. பணப்பெண்ணின் கால்கள் வீங்கி இருக்கின்றன, ஆகையால் மேலும் பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்தும் அதை அந்தப் பெண்ணின் முதலாளி கண்டுகொள்ளவே இல்லை. பணிப்பெண்ணின் வேலை நியமன முகவரோ இரண்டு முறை அப் பெண்ணிடம் பேசிய போதிலும் எதைப் பற்றியும் புகாரோ தகவலோ தெரிவிக்கவில்லை.
இதை எல்லாம் கருத்தில்கொண்டுதான் மனித வள அமைச்சர் ஜோசஃபின் டியோ சில நாட்களுக்கு முன் சில அறிவிப்புகளை விடுத்தார்.
அதாவது, முதலாளிகளின் கொடுமைகளுக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகள்; உரிய தகவல்களை உரிய இடங்களில் மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டிய ஏற்பாட்டு முறை; சமூகம், பங்காளித்துவ அமைப்புகளின் ஈடுபாடு எல்லாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொடுமைகளுக்குப் பணிப்பெண்கள் ஆளாகும் சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்று என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
வெளிநாட்டுப் பணிப்பெண்களுடன் சேர்ந்துசெயல்படும் அரசு சாரா அமைப்புகளின் கருத்துகளை அத்தகைய மறுபரிசீலனைகளில் கவனத்தில் எடுத்துக்கொள்வது பலன் அளிக்கும்.
பணிப்பெண்ணைப் பரிசோதிக்கும் மருத்துவர் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அது பற்றி அந்தப் பெண்ணின் முதலாளிக்குத் தெரியாமலேயே அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை ஏற்படுத்துவது;
பணிப்பெண் முதலாளியின் வீட்டிலேயே தங்கி இருக்காமல் அவரை வெளியே வசிக்க அனுமதிப்பது; பணிப்பெண்ணை வேறு ஒரு முதலாளி வேலையில் அமர்த்திக்கொள்வது தொடர்பான விதிகளில் மாற்றங்கள் செய்வது போன்றவையும் அரசாங்க மறுபரிசீலனைகளில் இடம்பெறத்தக்கவை.
கொடுமைகளில் இருந்து பணிப்பெண்களைக் காப்பாற்ற இன்னும் கடுமையான நிபந்தனைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் நடப்புக்கு வரும் பட்சத்தில் அது முதலாளிகளுக்கு அதிக செலவு வைக்கும் ஒன்றாகத்தான் இருக்கும்.
இருந்தாலும் தங்கள் நாட்டில் வசதியாக வாழ இயலாமல், சிங்கப்பூருக்கு வந்து உழைத்து பொருள் ஈட்டி தங்கள் குடும்பத்தாரை வாழவைப்பதுடன் தாங்களும் சிறப்பாக வாழவேண்டும் என்ற அவசியத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன், சுமைகளுடன், கனவுகளுடன் நம்மை நம்பி வரும் பணிப்பெண்களின் உயிர், பணத்தைவிட முக்கியமானது இல்லையா?