நடிகர் சூரி, பழனி சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது பேயை நிஜத்தில் பார்த்ததாக காணொளி ஒன்றைத் தமது 'ஃபேஸ்புக்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் நகைச்சுவை நடிகனாக அறிமுகமானவர் நடிகர் சூரி. தற்போது முன்னணி நகைச் சுவை நாயகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில், பேயை நேரில் பார்த்ததாகக் கூறி திகில் கிளப்பி இருக்கிறார் அவர். இது தொடர்பாக காணொளி ஒன்றையும் தனது 'ஃபேஸ்புக்' பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவர். சில தினங்களுக்கு முன்பு அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் கோவை=பழனி நெடுஞ்சாலையில் காரில் பயணித்துக் கொண்டிருந்தாராம் சூரி. அப்போது தூரத்தில் கும்மிருட்டாக இருந்த சாலையின் நடுவே வெளிச்சப்பொட்டாய் ஓர் உருவம் வழியை மறித்து நிற்பது போன்று இருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சூரியின் ஓட்டுநர் காரை சிறிது தூரத்திலேயே நிறுத்திவிட்டு செய்வதறியாது திகைத்தார். அதனைப் பார்த்த சூரி காரின் விளக்குகளை அணைத்து விட்டு தைரியமாக அந்த உருவத்தின் மீது மோதிச் செல்லுமாறு கூறினாராம். ஓட்டு நரும் அப்படியே செய்தாராம். அந்த உருவம் இருந்த இடத்தைக் கடக்கும்போது காரை யாரோ பலமாகத் தாக்குவது போன்ற சத்தம் மட்டும் கேட்டதாகவும் விளக்குகள் அணைக்கப்பட் டிருந்ததால் என்ன நடந்தது எனத் தெரியவில்லை எனவும் 'ஃபேஸ்புக்' பதிவில் சூரி குறிப்பிட் டுள்ளார்.
சுமார் ஒரு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய அந்த காணொளிக் காட்சி தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. இதனைப் பார்த்த இணைய வாசிகள், 'சூரியின் நடிப்பு அபாரம்', 'ஓட்டுநருக்கு சரியாக நடிப்பு வரவில்லை' என்றெல்லாம் கலாய்த்திருக்கிறார்கள். பேய்ப் படங்கள் தற்போது அதிகமாக வெளிவருவதன் தாக்கம்தான் சூரியை இவ்வாறு யோசிக்க வைக்கிறது என்று சிலர் முணுமுணுக்கின்றனர்.