அஞ்சலி தமிழில் அறிமுகமாகும்போது அவரது சித்தி பாரதி தேவியுடன் இருந்தார். சித்தியின் முயற்சியால் தான் அஞ்சலிக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததாகக் கூறப்பட்டது. ஆந்திராவில் இருந்த அஞ்சலியை 2002ஆம் ஆண்டு சென்னைக்கு அழைத்து வந்து நடனப் பயிற்சி, நடிப்புப் பயிற்சி அளித்து சினிமாவுக்குத் தயார் செய்ததும் அஞ்சலியின் சித்திதான். 'அங்காடித் தெரு' படத்தில் நடித்த பிறகு பேசப்படும் நடிகை ஆனார் அஞ்சலி. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகை ஆனார். இந்த நிலையில் அஞ்சலிக்கும் அவரது சித்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு அது குடும்பச் சண்டையாக மாறியது. இதனால் அஞ்சலி சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்றார்.
அதன் பிறகு இருவருக்கும் பேச்சுவார்த்தையே இல்லாமல் போனது. இப்போது இருவரும் சமரசம் ஆகி இருக்கிறார்களாம். அண்மையில் சென்னை வந்த அஞ்சலி பழைய சண்டையை மறந்து, அவரது சித்தி பாரதி தேவியின் வீட்டுக்குச் சென்றார். அவரும் பழைய சம்பவங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் அஞ்சலியிடம் அன்பாகப் பேசி மகிழ்ந்தார் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.