நடிகர் விக்ரம் பிரபு, பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக 'நெருப்புடா' உருவாகி வருகிறது. "இது அதிரடிக் காட்சிகள் நிறைந்த திகில் படம். விக்ரம் பிரபு ஒரு தீயணைப்பு வீரராக நடிக்கிறார். அவருடன் இணைந்து நிக்கி கல்ராணி நடிக்கிறார். மேலும் பொன்வண்ணன், 'நான்கடவுள்' ராஜேந்தி ரன், 'ஆடுகளம்' நரேன் ஆகியோரும் நடிக்கிறார்கள்," என்கிறார் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் பி.அசோக்குமார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவைக் கவனிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
"விக்ரம் பிரபு நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். எனவே தயக்கமின்றி எனது கதையிலும் நடிக்கச் சம்மதித்தார். இதையே எனக்கான முதல் அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளலாம். "அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இந்தப் படம் உருவாகும். கபாலி பாடலில் இடம்பெற்ற முதல் வார்த்தையே எங்களுக்கு தலைப்பாக கிடைத்ததில் அனைவருக்குமே மகிழ்ச்சி," என்கிறார் பி.அசோக்குமார்.